வங்கதேச ஊடுருவல் விவகாரம் | ஜார்க்கண்ட், மேற்கு வங்கத்தில் 17 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

வங்கதேச ஊடுருவல் விவகாரம் | ஜார்க்கண்ட், மேற்கு வங்கத்தில் 17 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை
Updated on
1 min read

புதுடெல்லி: வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் ஊடுருவிய விவகாரம் தொடர்பாக ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்கத்தில் 17 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

வங்கதேச ஊடுருவல் தொடர்பான பண மோசடி வழக்கை அமலாக்கத்துறை கடந்த செப்டம்பர் மாதம் பதிவு செய்து விசாரணையை தொடங்கியது. வேலை தேடி இந்தியாவுக்குள் ஊடுருவிய வங்கதேச பெண் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது. தன்னைப் போல் பல பெண்கள் இந்தியாவுக்குள் இருப்பதாக அவர் கூறியதை அடுத்து பல பெண்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில், ஒரு பெண்ணிடம் "போலி" ஆதார் அட்டை இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில், ஜார்க்கண்ட்டை தலைமையகமாகக் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள், ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்கத்தில் 17 இடங்களில் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் ஜார்க்கண்ட்டில் அதிக அளவில் ஊடுருவி இருப்பதாகவும், ஆனால் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா அரசு அதனை கண்டு கொள்ள மறுப்பதாகவும் பாஜக தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ள நிலையல் முதல் கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. அதோடு, மேற்கு வங்கத்தின் 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நாளை நடைபெற உள்ளது.

ஜார்க்கண்ட்டில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர், வங்கதேச ஊடுருவல் குறித்து எழுப்பினர். இதனால், ஜார்க்கண்ட்டில் பழங்குடியின மக்களின் விகிதம் குறைவதாகவும் அவர்கள் கவலை தெரிவித்தனர். வங்கதேசத்தில் இருந்து ஊடுருபவர்கள், ஜார்க்கண்ட் மாநில பெண்களை திருமணம் செய்து நிலங்களையும் அபகரிப்பதாக அவர்கள் குற்றம் சாட்டி இருந்தனர்.

ஜார்க்கண்ட்டில் பாஜக ஆட்சி அமைந்ததும், வங்கதேசத்தவர்களின் ஊடுருவல் குறித்து ஆராய ஒரு பாரபட்சமற்ற குழு அமைக்கப்படும் என்றும், அதன்மூலம் ஊடுருவியவர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்றும் அமித் ஷா தெரிவித்துள்ளார். மேலும், வங்கதேசத்தவர்கள் ஜார்க்கண்ட் பழங்குடி பெண்களை திருமணம் செய்து அதன் மூலம் சொத்துக்களை பெற்றிருந்தால் அந்த சொத்துக்கள் செல்லாது என்பதற்கான சட்டம் இயற்றப்படும் என்றும் அவர் உறுதி அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in