மாரடைப்பால் ஓட்டுநர் மயங்கியதால் துரிதமாக செயல்பட்டு பயணிகளை காப்பாற்றிய நடத்துநர்

மாரடைப்பால் ஓட்டுநர் மயங்கியதால் துரிதமாக செயல்பட்டு பயணிகளை காப்பாற்றிய நடத்துநர்
Updated on
1 min read

பெங்களூருவில் அரசு பேருந்தை இயக்கிய ஓட்டுநர் மாரடைப்பால் சரிந்த விழுந்த நிலையில், நடத்துநர் துரிதமாக செயல்பட்டு பேருந்தை நிறுத்தி 50 பேரின் உயிரை காப்பாற்றினார்.

பெங்களூரு மாநகர போக்குவரத்து கழகத்தின் ஜி 11 பேருந்து நேற்று யஷ்வந்த்பூரில் இருந்து நெலமங்களாவுக்கு சென்று கொண்டிருந்தது. ஓட்டுநர் கிரண் குமார் (32) அந்த பேருந்தை ஓட்டிக் கொண்டிருந்த போதே மாரடைப்பு ஏற்பட்டு, தனது இருக்கையில் இருந்து சரிந்தார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையில் சென்ற வாகனங்களின் மீது மோதி நிற்காமல் சென்றது.

இதை கவனித்த நடத்துநர் ஓபலேஷ் (43) உடனடியாக ஓட்டுநர் இருக்கைக்கு ஓடிவந்து, ஸ்டியரிங்கை பிடித்து கட்டுப்பாட்டில் கொண்டுவந்தார். மேலும் ஓட்டுநர் இருக்கையில் ஏறி அமர்ந்து பேருந்தை ஓரமாக நிறுத்தினார். இதனால் அந்தப் பேருந்தில் பயணித்த 50 பயணிகளும் பத்திரமாக காப்பாற்றப்பட்டனர்.

இதையடுத்து நடத்துநர் ஓபலேஷ், மாரடைப்பால் சரிந்த ஓட்டுநர் கிரண் குமாரை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், கிரண் குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் ஓபலேஷூம், போக்குவரத்து கழக ஊழியர்களும் சோகத்தில் ஆழ்ந்தனர்.

இதனிடையே ஓட்டுநர் கிரண் குமார் நெஞ்சு வலியால் சரிந்து விழுவதும், நடத்துநர் பேருந்தை துரிதமாக இயக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in