ம.பி. முதல்வர் மோகன் யாதவ்
ம.பி. முதல்வர் மோகன் யாதவ்

விலங்குகளால் உயிரிழந்தால் இழப்பீடு ரூ.25 லட்சமாக உயர்வு: மத்திய பிரதேச அரசு அறிவிப்பு

Published on

போபால்: காட்டு விலங்குகள் தாக்கி உயிரிழக்கும் நபரின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் இழப்பீடுத் தொகையை ரூ.25 லட்சமாக அதிகரித்து மத்திய பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.

உமரியா மாவட்டத்தில் உள்ளபாந்தவ்கர் புலிகள் காப்பகம் அருகே யானைகள் தாக்கி இரண்டு பேர் உயிரிழந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுகுறித்து மத்திய பிரதேசமுதல்வர் மோகன் யாதவ் செய்தியாளர்களிடம் கூறியுள்ளதாவது: யானைகள் உள்ளிட்ட காட்டுவிலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் இடையேயான மோதல் தொடர்கதையாக உள்ளது. இதனால், ஏற்படும் மனித உயிரிழப்புகளுக்கு இதுவரை ரூ.8 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டு வந்தது.

தற்போது அந்த நிவாரணத் தொகையை ரூ.25 லட்சமாக உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது. உமரியா மாவட்டத்தில் யானைகள் தாக்கி இருவர் உயிரிழந்த குடும்பங்களுக்கும் தற்போது உயர்த்தப்பட்ட இந்த இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும். இவ்வாறு மோகன் யாதவ் தெரிவித்தார்.

அண்மையில், பாந்தவ்கர் புலிகள் காப்பகத்திலிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள தேவ்ரா கிராமத்தைச் சேர்ந்த ராம்ரத்தன் யாதவ் (50) என்பவர் காட்டு யானை கொடூரமாக தாக்கியதில் உயிரிழந்தார்.

பின்னர் அதே யானை, பிராகி கிராமத்தைச் சேர்ந்த பைரவ் கோல் (35) என்பவரையும் தாக்கி கொன்றது. இந்த சம்பவத்தில் பங்கா கிராமவாசியான மாலு சாகு (32) என்பவரும் பலத்த காயமடைந்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in