Published : 17 Jun 2018 09:57 AM
Last Updated : 17 Jun 2018 09:57 AM
பெங்களூரு பத்திரிகையாளர் கவுரி லங்கேஷை சுட்டுக்கொன்றது ஸ்ரீராம் சேனா அமைப்பை சேர்ந்த பரசுராம் வாக்மோர் தான் என கர்நாடக சிறப்பு புலனாய்வு பிரிவு (சிஐடி) அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பெங்களூருவை சேர்ந்த பத்திரிகையாளரும், இந்துத்துவ எதிர்ப்பாளருமான கவுரி லங்கேஷ் (55) கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் 5-ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். இந்துத்துவ எதிர்ப்பாளர்கள் கோவிந்த் பன்சாரே, நரேந்திர தபோல்கர், கல்புர்கி ஆகியோரை சுட்டுக்கொன்ற பாணியில் இவரும் கொல்லப்பட்டதால் நாடு முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து விசாரித்து வரும் சிறப்புப் புலனாய்வுப் பிரிவு (சிஐடி) அதிகாரிகள், கல்புர்கியும், கவுரி லங்கேஷூம் ஒரே ரக துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என கண்டறிந்தனர். கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் இந்துத்துவ அமைப்புகளை சேர்ந்த 6 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து மூத்த சிஐடி பிரிவு அதிகாரி கூறியதாவது:
நாங்கள் முதலில் கைது செய்த இந்துத்துவ அமைப்பின் முக்கிய நிர்வாகி நவீன் குமாரை விசாரித்தபோது ஸ்ரீராம் சேனாவை சேர்ந்த சுஜித்குமார் (எ) பிரவீன் , பரசுராம் வாக்மோர் உள்ளிட்ட 5 பேர் குறித்த விவரம் தெரியவந்தது. பிரவீனை விசாரித்தபோது, கவுரி லங்கேஷை கொல்ல ‘ஆப்ரேஷன் அம்மா’ என திட்டம் தீட்டப்பட்டது. பீஜப்பூரை சேர்ந்த பரசுராம் வாக்மோர் உள்ளிட்டோரை தேர்வு செய்து பெல்காமில் துப்பாக்கிச் சுடும் பயிற்சி அளிக்கப்பட்டது என கூறினார்.
இதையடுத்து பரசுராம் வாக்மோரிடம் விசாரித்தபோது, “கடந்த 2017-ம் ஆண்டு இந்து மதத்தைக் காக்க ஒரு பெண்ணை கொலை செய்ய வேண்டும் என பணிக்கப்பட்டது. நானும் ஒப்புக் கொண்டேன். ஆனால் நான் கொல்லப்போகும் நபர் யார் என்று எனக்குத் தெரியாது. கவுரி லங்கேஷை பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. எனக்கு பிரவீன்குமார் கட்டளையிட்டவாறு கடந்த செப்டம்பர் 3-ம் தேதி பெங்களூரு வந்தேன். எனக்கு அந்தப் பெண்ணின் வீட்டை காட்டினார்கள். பின்னர் நான் கொலை செய்ய வேண்டிய பெண்ணை காட்டினார்கள். கொலை செய்வதற்காக ஒரே நபர் என்னை வழிநடத்தவில்லை. வேறு வேறு நபர்கள் ஒவ்வொரு இடத்துக்கும் அழைத்துச் சென்றனர். கொலை செய்வதற்கு முந்தைய தினம் எனக்கு துப்பாக்கியை கொடுத்தனர். நான் கவுரி லங்கேஷை பின் தொடர்ந்து, அவரது வீட்டு வாசலில் துப்பாக்கியால் 4 முறை சுட்டேன். உடனடியாக அறைக்குத் திரும்பி, பெங்களூருவில் இருந்து கிளம்பிவிட்டேன்” என வாக்குமூலம் அளித்தார்.
சிசிடிவியில் பதிவான கொலையாளியின் தோற்றமும், பரசுராம் வாக்மோரின் தோற்றமும் ஒத்துப் போகிறது. இருப்பினும் சம்பவம் நடந்த இடத்துக்கு அவரை அழைத்துச் சென்று மீண்டும் நடிக்க வைத்து வீடியோ எடுக்க உள்ளோம். அதன்பின், இரு வீடியோவையும் சோதனைக்கு அனுப்ப இருக்கிறோம். அதில் கிடைக்கும் முடிவை வைத்து அடுத்தக்கட்ட விசாரணை நடத்துவோம்
இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.
கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் இந்துத்துவ அமைப்பினர் 6 பேர் கைது செய்யப்பட்டதற்கு பாஜக, ஆர்எஸ்எஸ், பஜ்ரங் தளம், ஸ்ரீராம் சேனா உள்ளிட்ட அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். சிஐடி அதிகாரிகள் திட்டமிட்டு, இந்துத்துவ அமைப்பினரை இவ்வழக்கில் கொலையாளிகளாக ஜோடித்துள்ளனர் என குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில் கவுரி லங்கேஷை கொன்றதாக வாக்குமூலம் அளித்த பரசுராம் வாக்மோர், ஸ்ரீராம் சேனா அமைப்பின் தலைவர் பிரமோத் முத்தாலிக் உடன் இருக்கும் புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பிரமோத் முத்தாலிக் கூறியபோது, “தினமும் பல்வேறு கூட்டங்களில் பங்கேற்கும் என்னுடன் ஆயிரக்கணக்கானோர் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்கள். அவர்களுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. எங்கள் அமைப்புக்கும் அவர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. என்னுடம் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் அனைவரும் ஸ்ரீராம் சேனா அமைப்பினர் இல்லை” என விளக்கம் அளித்துள்ளார்.
இந்நிலையில் கவுரி லங்கேஷ் வழக்கில் கைதாகியுள்ள பரசுராம் வாக்மோர், பிரவீன் குமார், நவீன் குமார் உள்ளிட்ட 6 பேரை விடுதலை செய்யவும், அவர்களது குடும்பத்தினருக்கு நிதி வழங்கவும் ஸ்ரீராம் சேனா உள்ளிட்ட இந்துத்துவ அமைப்பினர் பணம் வசூலிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT