நடிகர் தர்ஷனுக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் இடைக்கால ஜாமீன்

நடிகர் தர்ஷனுக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் இடைக்கால ஜாமீன்
Updated on
1 min read

பெங்களூரு: கொலை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட கன்னட நடிகர் தர்ஷனுக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது. மருத்துவ காரணங்களுக்காக ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

பிரபல கன்னட நடிகரான தர்ஷன், தனது தோழியும் நடிகையுமான பவித்ரா கவுடாவை சமூக வலைதளத்தில் சீண்டிய தனது ரசிகர் ரேணுகா சுவாமி என்பவரை கடத்தி கொலை செய்த வழக்கில் கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கில் பவித்ரா கவுடா, தர்ஷனின் நண்பர்கள், ரசிகர் மன்ற தலைவர், பவுன்சர்கள் கைது செய்யப்பட்டனர்.

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய‌ சிறையில் தர்ஷன் அடைக்கப்பட்டார். அங்கு அவருக்கு கிடைத்த சொகுசு வசதிகள் குறித்த படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி சர்ச்சை ஆனது. அதைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் அவர் பெல்லாரி சிறைக்கு மாற்றப்பட்டார்.

இந்நிலையில், முதுகு தண்டு பகுதியில் ஏற்பட்ட பாதிப்புக்கு மருத்துவ சிகிச்சை பெற உள்ளதாக சொல்லி கர்நாடக மாநில உயர் நீதிமன்றத்தில் தர்ஷன் தரப்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதில் விஜயநகர மருத்துவ கழகத்தின் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரின் மருத்துவ அறிக்கையும் வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அவருக்கு ஆறு வார காலம் உயர் நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது. நீதிபதி விஷ்வஜித் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி தர்ஷன் தரப்பில் ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட ஜாமீன் மனு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

நிபந்தனைகள் என்னென்ன?

  • தர்ஷன் தனக்கு விருப்பம் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெறலாம்.
  • சிகிச்சை பெறும் மருத்துவமனையின் விவரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
  • அவருக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்த விவரங்களை அறிக்கையாக ஒரு வார காலத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
  • சிகிச்சையை தவிர வேறு விவகாரங்களிலும் ஈடுபடக் கூடாது.
  • தர்ஷன் தனது பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in