Published : 17 Jun 2018 09:42 AM
Last Updated : 17 Jun 2018 09:42 AM
இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்திக்கு 71 வயது ஆகிவிட்டதால், அவருக்கு அரசு பதவி வழங்க முடியவில்லை என கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து குமாரசாமி பெங்களூருவில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
கர்நாடக திட்டக் குழுவின் தலைவராக இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியை நியமிப்பது குறித்து, சில மூத்த அதிகாரிகள் அரசுக்கு ஆலோசனை வழங்கினர். இதனால் கடந்த 6-ம் தேதி அவரை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினேன். கர்நாடக மாநிலத்தில் நிதி ஆதாரத்தை முறையாக பயன்படுத்துவது, பெங்களூரு மாநகரை சிறந்த முறையில் வடிவமைப்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து பேசினோம். அப்போது எனது தலைமையிலான கூட்டணி அரசுக்கு உதவுவதற்கு தயார் என்று அவரும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
எனினும் கர்நாடக திட்டக் குழுவின் தலைவராக நாராயண மூர்த்தியை நியமிப்பதற்கு அவரது முதுமை ஒரு பெரும் தடையாக இருக்கிறது. அவருக்கு 71 வயதாகிவிட்டதால் அரசு பதவி வழங்க முடியவில்லை. இருப்பினும் வெளியே இருந்து அரசுக்கு உதவ நாராயண மூர்த்தி தயாராக இருக்கிறார். அவரது ஆலோசனையை பரிசீலிக்க முடிவெடுத்திருக்கிறோம். இந்நிலையில், கர்நாடக திட்டக் குழு தலைவர் பதவிக்கு யாரை நியமிப்பது என இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை.
இவ்வாறு கர்நாடக மாநில முதல்வர் குமாரசாமி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT