எல்லைப் பகுதியில் ரோந்துப் பணி: இந்தியா - சீனா இடையே உடன்பாடு

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

புதுடெல்லி: இந்திய - சீன எல்லையில் ரோந்துப் பணி ஏற்பாடுகள் தொடர்பாக இரு நாடுகள் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார்.

எதிர்வரும் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யா செல்லவிருக்கிறார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த விக்ரம் மிஸ்ரி
“இந்தியா - சீனா இடையே பேச்சுவார்த்தைக்கான அதிகாரிகள் கடந்த சில வாரங்களாக ஒருவருக்கொருவர் தொடர்பில் இருந்து வருகின்றனர். இதில் இந்தியாவும் சீனாவும் எல்லை கட்டுப்பாட்டு கோடு (எல்ஏசி) பகுதிகளில் ரோந்து ஏற்பாடுகள் குறித்த ஒப்பந்தத்தை எட்டியுள்ளன. இது 2020-ம் ஆண்டில் எழுந்த பிரச்சினைகளைத் தீர்க்கும். இதில் நாங்கள் அடுத்தகட்ட நகர்வுக்கு முயற்சி செய்வோம்” என்றார்.

ரஷ்யாவில் நடக்கும் 16-வது பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்வதற்கு ஒரு நாளைக்கு முன்பாக எல்லைக் கட்டுப்பட்டு கோடு அருகே ரோந்து குறித்த இந்த அறிவிப்பு வந்துள்ளது கவனிக்கத்தக்கது. அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகவில்லை என்றாலும், பிரிக்ஸ் உச்சி மாநாட்டின்போது, இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, கடந்த ஆகஸ்ட் மாதம், இந்தியாவும் சீனாவும் எல்லை நிலவரம் குறித்து விவாதம் நடத்தின. அப்போது எல்லையில் கூட்டாக அமைதியை பராமரிக்க முடிவு செய்தன. இரு தரப்பினரும் தங்கள் கருத்து வேறுபாடுகளை குறைத்து, நிலுவையில் உள்ள பிரச்சினைகளுக்கு விரைந்து தீர்வு காண முயன்றனர். இதற்காக தூதரக மற்றும் ராணுவ வழிகளில் தொடர்புகளை தீவிரப்படுத்த அவர்கள் ஒப்புக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in