அரசியலில் எம்ஜிஆர்தான் எனக்கு ரோல் மாடல்: ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் கருத்து

அரசியலில் எம்ஜிஆர்தான் எனக்கு ரோல் மாடல்: ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் கருத்து
Updated on
1 min read

அமராவதி: அரசியலில் தனக்கு எம்ஜிஆர்தான் ரோல் மாடல் என ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் அவர் அதிமுகவின் 53-வதுஆண்டு விழாவுக்கு வாழ்த்துகளும் தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநில துணை முதல்வரும், ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் நேற்று சமூக வலைதளம் மூலம்அதிமுகவின் 53-வது ஆண்டு விழாவுக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். அதில் அவர், “எம்ஜி. ராமசந்திரன் எனும் எம்ஜிஆர் அதிமுக எனும் கட்சியை நிறுவி,தமிழக அரசியலில் தோல்வியையே சந்திக்காத வரலாற்றை படைத்தவர். பல ஏழை, எளியவர்களுக்கு வாழ்வளித்தவர். அவரது ஆட்சியில் சமூக நலனும், மாநில வளர்ச்சியும் ஒருசேர நடந்தது.

அவரது ஆட்சியில் தமிழகத்தை அனைத்து துறையிலும் நாட்டிலேயே முதன்மை மாநிலமாக விளங்குமாறு செய்தார். மக்களுக்கு அடிப்படை வசதிகளை உருவாக்கி கொடுத்ததுடன், தொலைநோக்கு பார்வையுடன் பல்வேறு திட்டங்களுக்கு அடித்தளம் அமைத்தவர் எம்ஜிஆர். அவரின் மக்கள் நல திட்டங்கள், அரசியல் வியூகத்தை கண்டு அவரை எனது ரோல் மாடலாக ஏற்றுக்கொண்டேன்.

எம்ஜிஆருக்கு பின்னர், புரட்சி தலைவியாக ஜெயலலிதா, எம்ஜிஆர் கண்ட கனவுகளை நினைவாக்கினார். அதனால்தான் அவர் மக்களிடையே ‘அம்மா’ எனும் பெயரை பெற்றார். தற்போது அக்கட்சியின் தலைவர் பழனிசாமியின் தலைமையில் அக்கட்சி எம்ஜிஆர், ஜெயலலிதா கண்டகனவுகளை நிறைவேற்ற வேண்டும். மக்களின் குரலாக அக்கட்சி தமிழகத்தில் ஒலிக்க வேண்டும். பல சவால்களை சந்தித்து வெற்றி பெறஅக்கட்சியின் கொள்கைகள் கைகொடுக்கட்டும் என வாழ்த்துகிறேன்.

ஜெயலலிதாவின் காலத்திலும் அவரதுமறைவுக்குப் பிறகும் அதிமுக அரசின் முதலமைச்சராக சிறப்பாக செயலாற்றிய ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இந்தநாளில் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். எனது ஜனசேனா கட்சி சார்பாக அதிமுக தொண்டர்கள் அனைவருக்கும் இதயம் கனித்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in