மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் 3% அகவிலைப்படி

மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் 3% அகவிலைப்படி

Published on

புதுடெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்த்தப்படும் என்றும் இதுகுறித்த அறிவிப்பு தீபாவளிக்கு முன்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 9-ம் தேதி மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அப்போதே மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்புவெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வெளியாகவில்லை. எனினும், வரும் 31-ம் தேதி கொண்டாடப்பட உள்ள தீபாவளி பண்டிகைக்கு முன்பாக அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

விலைவாசி உயர்வை சமாளிப்பதற்காக மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை பணவீக்க அளவின் அடிப்படையில் அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது. கடைசியாக கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் அகவிலைப்படி உயர்த்தப்பட்டது.

முன் தேதியிட்டு: இது இப்போது அடிப்படை சம்பளத்தில் 50% ஆக உள்ளது. இந்த அகவிலைப்படி மேலும் 3% சதவீதம் உயர்த்தப்படலாம் என்றும் ஜூலை 1-ம் தேதி முதல் முன் தேதியிட்டு வழங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் 1 கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள். இதனிடையே, இமாச்சல அரசுஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வை தசரா பண்டிகைதொடங்கும் முன்பே அறிவித்துவிட்டது. இதன்மூலம் அம்மாநிலத்தைச் சேர்ந்த 1.8 லட்சம் ஊழியர்கள் 1.7 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in