உத்தராகண்ட் சிறையில் ராம் லீலா நாடகம்: சீதையை தேடிச் செல்வதாக நடித்து 2 கைதிகள் தப்பியோட்டம்

சிறைக் கைதிகளின் ராம் லீலா நாடகத்தில் ஒரு காட்சி.
சிறைக் கைதிகளின் ராம் லீலா நாடகத்தில் ஒரு காட்சி.
Updated on
1 min read

டேராடூன்: உத்தராகண்ட் மாநிலத்தில் சிறைகைதிகள் நடத்திய ராம் லீலா நாடகத்தில் வானர சேனை வேடமிட்ட இருவர் சீதையை தேடிச் செல்வதாக கூறி சிறையிலிருந்து தப்பினர்.

உத்தராகண்ட் மாநிலம் ஹரித்துவாரில் ரோஷ்னாபாத் என்ற இடத்தில் மாவட்ட சிறைச்சாலை உள்ளது. இந்த சிறையில் ஆண்டுதோறும் நவராத்திரி பண்டிகையின்போது கைதிகளை கொண்டு சிறை நிர்வாகம் ராம்லீலா நாடகம் நடத்தி வருகிறது. இந்த ஆண்டு நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு சிறைவளாகத்தில் ராம் லீலா நாடகம் நடைபெற்றது. இந்த நாடகத்தில் வானர சேனை வேடமிட்ட கைதிகள், சீதா தேவியை தேடிச் செல்வதுபோல் காட்சி வருகிறது.

இவ்வாறு தேடிச் சென்ற வானரசேனைகளில் பங்கஜ், ராஜ்குமார் ஆகிய இரு கைதிகள், உரியநேரத்தில் மேடைக்கு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவர்களை தேடியபோது, இருவரும் இருளை பயன்படுத்தி ஏணி மூலம் சுற்றுச்சுவரை தாண்டி சிறையில் இருந்து தப்பியது தெரியவந்தது.

தப்பிய கைதிகளில் பங்கஜ், ரூர்க்கியை சேர்ந்தவர். கொலை வழக்கில் ஆயுள் சிறை தண்டனை அனுபவித்து வந்தார். மற்றொரு கைதியான ராஜ்குமார், உத்தர பிரதேச மாநிலம் கோண்டாவை சேர்ந்தவர். ஆள் கடத்தல் வழக்கில் விசாரணைக் கைதியாக அடைக்கப்பட்டிருந்தார். தப்பிய இருவரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் சிறை பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கர்மேந்திர சிங் கூறுகையில், “சிறையில் கட்டுமான வேலைகள் நடந்து வருகின்றன. மேலும் ராம் லீலா நாடகம் நடந்துள்ளது. இதனை வாய்ப்பாக பயன்படுத்தி இருவரும் தப்பிச் சென்றுள்ளனர். இது உண்மையில் சிறை நிர்வாகத்தின் அறியாமைதான். இது தொடர்பாக துறை ரீதியான விசாரணையும் நடத்தப்படும்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in