Published : 03 Jun 2018 02:07 PM
Last Updated : 03 Jun 2018 02:07 PM
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட, 5 ஆயிரம் கி.மீ வரை செல்லக்கூடிய அக்னி-5 ஏவுகணையைப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் இன்று வெற்றிகரமாக ஏவி பரிசோதனை செய்தனர்.
ஒடிசா மாநிலத்தில் உள்ள அப்துல்கலாம் தீவில் உள்ள மிகப்பெரிய டிரக்கில் அமைக்கப்பட்ட நகரும் ஏவுதளத்தில் இருந்து இந்த ஏவுகணை இன்று காலை 9.48 மணிக்கு ஏவப்பட்டது. அக்னி-5 ஏவுகணை 6-வது முறையாக விண்ணில் ஏவி வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது எனப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுவதாவது:
''அக்னி-5 ஏவுகணை ஏவப்பட்டதும், அதை ராடர் மூலம் கண்காணிக்கப்பட்டு, செல்லும் இடங்கள் அனைத்தும் சரியானதா என்று ஆய்வு செய்யப்பட்டது. மற்ற ஏவுகணைகளைப்போல் அல்லாமல் அக்னி-5 ஏவுகணை மிகவும் நவீன தொழில்நுட்பத்தில், பாதுகாப்பு ஆய்வு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) உருவாக்கியுள்ளது.
ஏவுகணை செல்லுமிடத்தை அதிக நுண்ணறிவுத் திறனுடன் கண்காணித்தல், லேசர் தொழில்நுட்பம், இலக்கை துல்லியமாகத் தாக்கச் செய்யும் தொழில்நுட்பம் ஆகியவை இந்த ஏவுகணையில் இடம் பெற்றுள்ளன.
கடந்த 2012-ம் ஆண்டில் அக்னி-5 முதல் முறையாகவும், 2013-ம் ஆண்டு 2-ம் முறையாகவும் விமானத்தின் மூலம் ஏவப்பட்டது. 3-வது, 4-வது மற்றும் 5-வது அக்னி-5 ஏவுகணைகள் நகரும் ஏவுதளத்தில் இருந்து ஏவி பரிசோதிக்கப்பட்டது.
தற்போது ராணுவத்திடம் 700கி.மீ. செல்லக்கூடிய அக்னி-1, 2 ஆயிரம் கி.மீ. வரை செல்லக்கூடிய அக்னி-2 ஏவுகணை, 2,500 முதல் 3,500 கி.மீ. வரை செல்லும் திறன் படைத்த அக்னி-3, அக்னி-4 ஏவுகணை, அக்னி-5 ஏவுகணைகள் உள்ளன.
அக்னி-5 ஏவுகணை முதல் முறையாகக் கடந்த 2012, ஏப்ரல் 19-ம் தேதி ஏவி வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது. அதன்பின் 2013, செப்டம்பர் 13-ம் தேதி 2-வது முறையாகவும், 2015, ஜனவரி 31-ம் தேதி 3-வது முறையும், 2016, டிசம்பர் 26-ம் தேதி 4-வது முறையும், 2018, ஜனவரி 18-ம் தேதி 5-வது முறையும் வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டுள்ளது.''
இவ்வாறு பாதுகாப்புத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT