‘தேர்தலில் வினேஷ் போகத் வெற்றி பெற எனது பெயர் உதவியது’ - பிரிஜ் பூஷன் சரண் சிங்

பிரிஜ் பூஷன் சரண் சிங்
பிரிஜ் பூஷன் சரண் சிங்
Updated on
1 min read

கோண்டா: ஹரியானா தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட வினேஷ் போகத் வெற்றி பெற எனது பெயரின் சக்தி உதவியது என முன்னாள் பாஜக எம்.பி பிரிஜ் பூஷன் சரண் சிங் தெரிவித்துள்ளார்.

முன்னாள் மல்யுத்த வீராங்கனையான வினேஷ் போகத், கடந்த மாதம் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இந்த சூழலில் ஹரியானா மாநில சட்டப்பேரவை தேர்தலில் ஜூலானா தொகுதியில் போட்டியிட்டார். இன்று (அக்.8) தேர்தல் முடிவுகள் வெளியாகின. இதில் 65,080 வாக்குகளை அவர் பெற்றார். பாஜக வேட்பாளர் யோகேஷ் குமாரை 6,105 வாக்குகளில் வெற்றி பெற்றார்.

இந்த சூழலில் வினேஷ் போகத்தின் வெற்றி குறித்து முன்னாள் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் தெரிவித்தது, “என் பெயரைப் பயன்படுத்தி அவர் வெற்றி பெற்றுள்ளார் என்றால் நான் பெரிய மனிதன் என்று அர்த்தம். எனது பெயரின் சக்தி அவர் வெற்றி பெற உதவியது.

அவர் செல்லும் இடம் எல்லாம் அழிவு நிச்சயம். தேர்தலில் அவருக்கு வெற்றி, காங்கிரஸுக்கு அழிவு. இந்த மல்யுத்த வீரர்கள் நாயகர்கள் அல்ல வில்லன்கள். நாட்டு மக்கள் காங்கிரஸை தேர்தலில் புறக்கணித்துள்ளனர். இதனை அவர்கள் இப்போதாவது ஒப்புக் கொள்ள வேண்டும். ஜம்மு காஷ்மீர் அரசியல் களம் என்பது முற்றிலும் வேறானது. அங்கு மக்கள் அளித்துள்ள தீர்ப்பை ஏற்கிறோம்” என தெரிவித்தார்.

பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டை வைத்தனர். அதையடுத்து அந்த விவகாரத்தில் நீதி வேண்டி சாக்‌ஷி மாலிக், வினேஷ் போகத் உள்ளிட்டோர் டெல்லியில் போராட்டம் மேற்கொண்டனர். அதன் பிறகு அவர் மீது டெல்லி போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in