Last Updated : 24 Jun, 2018 09:49 AM

 

Published : 24 Jun 2018 09:49 AM
Last Updated : 24 Jun 2018 09:49 AM

காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்த‌தில் கர்நாடக மாநிலத்துக்கு மத்திய அரசு அநீதி: முதல்வர் குமாரசாமி குற்றச்சாட்டு

காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்த‌ விவகாரத்தில் மத்திய அரசு கர்நாடகாவுக்கு அநீதி இழைத்துள்ளது என்று முதல்வர் குமாரசாமி குற்றம் சாட்டியுள் ளார்.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி மத்திய அரசு நேற்று முன்தினம் காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்காற்றுக் குழு ஆகிய இரு அமைப்புகளின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமித்தது. கர்நாடக அரசுக்கு காலக்கெடு வழங்கியும் தங்கள் சார்பில் பிரதிநிதிகளின் பெயர்களை மத்திய அரசுக்கு அனுப்பவில்லை. இதனால் கர்நாடக அரசின் முடிவுக்காக காத்திருக்காமல் இந்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது.

இதுகுறித்து கர்நாடக முதல்வர் குமாரசாமி நேற்று பெங்களூருவில் கூறியதாவது:

காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்காற்றுக் குழு ஆகியவை குறித்து கர்நாடக அரசு சில சந்தேகங்களை எழுப்பியது. சில விதிமுறைகளை மாற்றுமாறு மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தோம்.

நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்திய பிறகே, இந்த அமைப்பை அமைக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி இருந்தோம். ஆனால் மத்திய அரசு எங்களை கேட்காமலேயே இந்த அமைப்புகளின் உறுப்பினர்களை அறிவித்துள்ளது. இதன் மூலம் கர்நாடக விவசாயிகளின் கோரிக்கையை புறக்கணித்துள்ளது. கர்நாடகாவுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து சட்ட ரீதியாக போராடுவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஜூலை 5-ல் பட்ஜெட்

கர்நாடக சட்டப்பேரவையின் கூட்டுக்கூட்டம் ஜூலை 2–ம் தேதி ஆளுநர் வாஜூபாய் வாலாவின் உரையுடன் தொடங்குகிறது. அதன்பின் முதல்வர் குமாரசாமி 5-ம் தேதி புதிய பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x