Last Updated : 12 Jun, 2018 04:00 PM

 

Published : 12 Jun 2018 04:00 PM
Last Updated : 12 Jun 2018 04:00 PM

சுற்றுலாவாசிகளின் வருகையைத் தடுக்க ஹவுஸ்புல் பேனர்கள்: நாள் ஒன்றுக்கு 4 ஆயிரம் கார்கள் வருகையால் நெரிசலில் நைனிடால்

இந்தியாவின் புகழ்பெற்ற கோடை வாசஸ்தலங்களில் ஒன்றான நைனிடாலில் ஹவுஸ்புல் பேனர்கள் பல இடங்களிலும் வைக்கப்பட்டுள்ளன.

பல்வேறு வாகனங்களில் சுற்றுலாப் பயணிகள் வருவதைத் தடுப்பதற்காகவே இந்த பேனர் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. முக்கியமாக ரிசார்ட்கள் உள்ள நகரங்களில், புறநகர்ப் பகுதிகளில் இது அதிகம் காணப்படுகிறது.

நகரத்தில் நிலவிய மோசமான போக்குவரத்து மேலாண்மைக்காக உத்தரகாண்ட் உச்ச நீதிமன்றம் அதிகாரிகளுக்கு கண்டனம் தெரிவித்தது.

நைனிடாலுக்கு வருகை தரும் சுற்றுலாவாசிகளை வழக்கமாக 'வெல்கம்' பதாகைகள் வரவேற்கும். ஆனால் தற்போது முக்கிய சுற்றுலா இடங்களான பிம்டால் கிராஸிங், காத்கோதம் போலீஸ் கிராஸிங் மற்றும் நாரிமன் கிராஸிங் ஆகியவற்றை நோக்கிச் செல்லும் சாலைகளில் 'நைனிடால் ஹவுஸ்புல்' என்று இந்தி மொழியில் எழுதப்பட்ட பேனர்களைக் காண முடிகிறது. இந்தச் சாலைகள் என்றில்லை இவை உள்ளிட்ட நகரைத் தொடும் அத்தனை சாலைகளிலும் நைனிடால் ஹவுஸ்புல் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.

நேற்றைய தினம் போக்குவரத்து அதிகாரிகள், நைனிடால் சாலைகளில் போக்குவரத்து மிதமிஞ்சிய நிலையில் நெருக்கடியில் நகரம் தத்தளித்தபோது இந்த பேனர்களை நகரின் அத்தனை நுழைவுப் பகுதிகளிலும் வைத்ததாக தேசிய போக்குவரத்து காவல் அதிகாரி மகேஷ் சந்திரா தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், ''நைனிடாலில் வாகனங்கள் நிறுத்துவதற்கென்று உள்ள 12 பார்க்கிங் இடங்களில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட கார்கள் நிறுத்துவதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஆனால் ஒருநாளைக்கு மூவாயிரம் முதல் நான்காயிரம் கார்கள் வந்துகொண்டிருக்கின்றன.

சாதாரணமாக பார்த்தால் போக்குவரத்து நெருக்கடி என்பது வார இறுதியில் சுற்றுலாப் பயணிகள் டெல்லியிருந்தும் உத்தரப் பிரதேசத்திலிருந்தும் அலையென திரண்டு வருவதுதான். இதுபோன்ற ஒரு சூழ்நிலையில், சுற்றுலாப் பயணிகள் தங்கள் வாகனங்களை நகர எல்லைகளுக்கு அப்பால் விட்டுச்செல்ல வேண்டுமென விரும்புகிறார்கள்.

நகரத்தின் புறநகர் பகுதிகளான கலாதுங்கி, நாராயண் நகர், ரூசி பைபாஸ் ஆகிய இடங்களில் தற்காலிகமாக வாகனங்களை நிறுத்துவதற்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இது நெரிசலை எளிதாக்குவதற்கு மட்டுமே. நைனிடால் நிலைமை மோசமடையாமல் இருக்க உறுதி செய்ய போக்குவரத்து ஊழியர்கள் ஒருவருக்கொருவர் ஒருங்கிணைக்கின்றனர்'' என்று மகேஷ் சந்திரா தெரிவித்தார்.

உத்தரகாண்ட் உச்ச நீதிமன்றம் நேற்று நைனிடால் போக்குவாரத்து நிர்வாகம் குறித்து கண்டனம் தெரிவித்துள்ளது.

நீதிமன்ற உத்தரவில் ''சுற்றுலா நகரத்தில், போக்குவரத்து நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கான உத்தரவுகளை ஏன் நிறைவேற்றத் தவறியது. அதைத் தொடர்வதில் என்ன சிக்கல் என ஒரு வாரத்திற்குள் விளக்கம் அளிக்கவேண்டும்'' என நைனிடால் மாவட்ட நிர்வாகத்தை கேட்டுக் கொண்டுள்ளது.

2012 ஆம் ஆண்டில் நைனிடாலைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அஜய் சிங் ராவாட் தாக்கல் செய்த ஒரு பொது நல மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதிகள் சுதாகன் துலிலியா மற்றும் லோக்பால் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த அறிவிப்பை வெளியிட்டது.

சுற்றுலாப் பயணிகள் நைனிடாலுக்கு அவர்களது சொந்த வாகனங்களில் வரும்போது அவர்களுக்குத் தேவையான வாகனப் போக்குவரத்து, நிறுத்தம் தொடர்பான உரிய வசதிகளை செய்து தருமாறு இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் உச்ச நீதிமன்றம் மாநில அரசைக் கேட்டிருந்தது.

இதுகுறித்து பேசிய உள்ளூர் வாகன ஓட்டுநர்கள் சிலர், ''சுற்றுலா நகரத்தில் நிறுத்தும் வாகன இடங்களை நிர்மாணிப்பதுதான் இதற்கு ஒரே வழி. அதே நேரம் நைனிடால் நகரத்தில் போக்குவரத்து வாகன நெரிசல் கடுமையாக ஏற்படுவதால் நகரத்திற்குள் உள்ள உள்ளூர் இயற்கைக் காட்சிகளைக் காண, சுற்றுலா வாகனங்களை அனுமதிக்கக் கூடாது. மற்றபடி, அவர்கள் நைனிடாலுக்ககு வெளியே உள்ள இயற்கைக் காட்சிகளைக் காண தங்கள் வாகனங்களில் செல்லட்டும்'' என்று தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x