Last Updated : 05 Jun, 2018 12:31 PM

 

Published : 05 Jun 2018 12:31 PM
Last Updated : 05 Jun 2018 12:31 PM

‘காலா’வுக்கு கதவு திறக்கப்படுமா?: கர்நாடக உயர் நீதிமன்றத்தை நாடினார் தனுஷ்

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘காலா’ திரைப்படத்தைக் கர்நாடக திரையரங்குகளில் தடையின்றி திரையிட அனுமதிக்கவும், போதுமான பாதுகாப்பு அளிக்கவும், கர்நாடக அரசுக்கும், கன்னட திரைப்பட வர்த்தக சபைக்கும் உத்தரவிடக்கோரி, தயாரிப்பாளர் நடிகர் தனுஷ், அவரின் மனைவி ஐஸ்வர்யா தனுஷ் சார்பில் பெங்களூரு உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. காலா திரைப்படம் உலக அளவில் நாளை மறுநாள்(7-ம் தேதி) ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில், இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நடைமுறைப்படுத்தி தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் வலியுறுத்தி இருந்தார். கர்நாடகத்தில் பிறந்தவரான ரஜினிகாந்த் அந்த மாநில மக்களுக்கு எதிரான கருத்துக்களை கூறியதற்குக் கன்னட அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

அதுமட்டுமல்லாமல், ரஜினி நடித்து வெளியாக உள்ள ‘காலா’ திரைப்படத்தையும் கர்நாடகத்தில் எந்த திரையங்குகளிலும் வெளியிட விடமாட்டோம் என்று மிரட்டல் விடுத்தனர். அதேபோல, கன்னட திரைப்பட வர்த்தக சபை(கேஎப்சிசி) அமைப்பும் கலா திரைப்படத்தை வாங்கமாட்டோம், யாருக்கும் வினியோகிக்க மாட்டோம் எனத் தெரிவித்தது.

இதனால், வரும் 7-ம்தேதி கர்நாடகத்தில் காலா திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில், காலா திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் நடிகர் தனுஷ், அவரின் மனைவி ஐஸ்வர்யா தனுஷ் ஆகியோர் காலா திரைப்படத்தைத் தடையின்றி மாநிலத்தில் ரிலீஸ் செய்ய மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

அவர்கள் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

திரைப்படவியல் சட்டம் 1952-, பி பிரிவின் கீழ் மத்திய திரைப்பட தணிக்கைப் பிரிவு(சிபிஎப்சி) காலா திரைப்படம் ரிலீஸ் செய்ய அனுமதித்துள்ளது. அனைத்து விதமான விதிமுறைகளையும் நாங்கள் பின்பற்றியதால் இந்தச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்தச் சான்றிதழ் பெற்றபின், இந்தத் திரைப்படத்தை வெளியிடுவது என்பது மனுதாரரின் அடிப்படை உரிமையாகும்.

ஆதலால், ‘காலா’ திரைப்படத்தை கர்நாடகாவில் உள்ள திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய எந்தவிதமான தடையும் இல்லாமல் திரையரங்குக்கு போதுமான பாதுகாப்பு அளிக்க போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும். மேலும், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், படவினியோகிஸ்தர்களுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

கன்னட திரைப்பட வர்த்தக சபை கர்நாடகத்தில் காலா திரைப்படத்தை வெளியிட அனுமதிக்கமாட்டோம், படத்தை வினியோகிக்கவும்மாட்டோம் எனத் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக கடந்த மாதம் 30-ம் தேதி கேஎப்சிசி தலைவர் சா ரா கோவிந்து அறிக்கையும் வெளியிட்டுள்ளார். பல கன்னட அமைப்புகளும், காலா திரைப்படத்தை ரீலீஸ் செய்ய எதிர்ப்புத் தெரிவித்து, முதல்வர் எச்டி குமாரசாமியிடம் மனு அளித்துள்ளன.

ஆதலால், இந்தத் திரைப்படத்தை மாநிலத்தில் எந்தவிதமான சிக்கலின்றி வெளியிட கர்நாட அரசுக்கும், கன்னட திரைப்பட வர்த்தக சபைக்கும் உத்தரவிட வேண்டும்’’ என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு பெங்களூரு உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே காலா திரைப்படத்தை வெளியிடக் கன்னட அமைப்புகள் தடை செய்யக்கூடாது என்று நடிகர் பிரகாஷ் ராஜும் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில், ‘‘காலாவுக்கும், காவிரிக்கும் என்ன சம்பந்தம்?. ஏன் எப்போதுமே திரைப்படத்துறையினரை இலக்காக வைக்கிறார்கள்.

காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சியிலும், சட்டத்தைக் கையில் எடுத்துச் செயல்படுவோர்கள் ஆதிக்கம் நடக்க வேண்டுமா. பாஜக ஆட்சி செய்யும் மாநிலத்தில்தான் பத்மாவதி திரைப்படத்துக்கு பல்வேறு எதிர்ப்புகள் எழுந்தன. அதேபோல இந்த அரசும் செய்ய வேண்டுமா. சாமானிய மக்களுக்குச் சரியான விஷயத்தை உறுதி செய்வது அரசின் கடமையாகும்’’எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x