சத்தீஸ்கர் மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கில் தொழிலதிபருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன்

சத்தீஸ்கர் மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கில் தொழிலதிபருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன்
Updated on
1 min read

புதுடெல்லி: மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கில், சத்தீஸ்கரைச் சேர்ந்த தொழிலதிபர் சுனில் தம்மானியை அமலாக்கத் துறை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்தது. ஓராண்டுக்கு மேலாக அவர் சிறையில் இருந்து வந்த நிலையில், நேற்று அவருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

சுனில் தம்மானிக்கு ஜாமீன் வழங்க சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் மறுத்த நிலையில், அவர் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அம்மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அடங்கிய அமர்வு, நேற்று அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த சவுரப் சந்திரகர் மற்றும் ரவி உப்பால் இருவர் இணைந்து, ஐக்கிய அரபு அமீரகத்தைத் தலைமையிடமாகக் கொண்டு மகாதேவ் என்ற பெயரில் சூதாட்ட செயலியை நடத்தி வந்தனர். இந்தச் செயலி மூலம் தினமும் ரூ.200 கோடி லாபம் ஈட்டிய அவர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு பெரும் தொகை லஞ்சமாக வழங்கி வந்துள்ளனர்.

சத்தீஸ்கர் மாநில முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகலுக்கு, அம்மாநில சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு இவர்கள் ரூ.500 கோடி வழங்கியதாக அமலாக்கத் துறை குற்றம்சாட்டியுள்ளது. இவ்விருவருக்கும் தாவூத் இப்ராகிம் அமைப்புடன் தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தற்போது சவுரப் சந்திரகர் மற்றும் ரவி உப்பாலை துபாய் காவல் துறை தடுப்புக் காவலில் வைத்துள்ளது. அவர்களை இந்தியா அழைத்து வரும் முயற்சியில் அமலாக்கத் துறை இறங்கியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in