Published : 18 Jun 2018 09:18 AM
Last Updated : 18 Jun 2018 09:18 AM

காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை தொடரும் ராணுவ நடவடிக்கை நிறுத்தம் வாபஸ்: மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்

காஷ்மீரில் ராணுவ நடவடிக்கை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை தொடரும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நல்லெண்ண நடவடிக்கையாக காஷ்மீரில் ராணுவ நடவடிக்கை நிறுத்தத்தை மத்திய அரசு கடந்த மே மாதம் 17-ம் தேதி அறிவித்தது. கடந்த வியாழக்கிழமையன்று ஸ்ரீநகர் பத்திரிகையாளர் குடியிருப்பு அருகே பத்திரிகையாளர் சுஜாத் புகாரி தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா இயக்க தீவிரவாதிகள் இந்தக் கொலையை செய்திருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். அதே நாளில் புல்வாமா என்ற இடத்தில் அவுரங்கசீப் என்ற ராணுவவீரரை தீவிரவாதிகள் கடத்திச் சென்று சுட்டுக் கொன்றனர்.

இந்நிலையில், ராணுவ நடவடிக்கை நிறுத்தத்தை வாபஸ் பெறுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பதிவிட்டுள்ள ட்விட்டர் செய்தியில் கூறியுள்ளதாவது:

ரம்ஜான் மாதத்தை முன்னிட்டு காஷ்மீரில் இணக்கமான சூழ்நிலையை ஏற்படுத்த காஷ்மீரில் ராணுவ நடவடிக்கை நிறுத்தத்தை மத்திய அரசு அறிவித்தது. இதை முன்னிட்டு ராணுவத்தினர் தாக்குதல் நடத்தாமல் இருந்தனர். ஆனால், தீவிரவாதிகள் பொதுமக்கள் மீதும் ராணுவத்தினர் மீதும் தாக்குதலை தொடர்ந்து நடத்தி கொலைகளை செய்தனர். ராணுவ நடவடிக்கை நிறுத்தம் நீட்டிக்கப்படாது. தீவிரவாதிகளின் தாக்குதலையும், வன்முறைகளையும், படுகொலைகளையும் தடுத்து நிறுத்த தேவையான எல்லா நடவடிக்கைகளையும் எடுக்குமாறு பாதுகாப்பு படையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அமைதியை விரும்பும் மக்கள் ஒன்றிணைந்து தீவிரவாதிகளை தனிமைப்படுத்தி, தவறான வழிகாட்டப்பட்டவர்களை அமைதிப் பாதைக்கு திருப்ப வேண்டியது அவசியம். கடந்த ஒரு மாதமாக ராணுவ நடவடிக்கை எதையும் மேற்கொள்ளாமல் உச்சகட்ட பொறுமை காத்த ராணுவ வீரர்களுக்கு நன்றியை தெரிவிக்கிறேன்.

இவ்வாறு ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x