Published : 17 Jun 2018 09:47 AM
Last Updated : 17 Jun 2018 09:47 AM
பெண்களுக்கு எதிரான குற்றங்களை ஒடுக்குவதற்காக 24 மணி நேர மொபைல் போலீஸ் சேவையை திரிபுரா மாநில அரசு அறிமுகம் செய்துள்ளது.
இந்த சேவையை நேற்று திரிபுரா மாநில முதல்வர் விப்லவ் குமார் தேவ் அகர்தலா நகரில் தொடங்கி வைத்தார். விழாவில் அவர் பேசும்போது, “திரிபுராவில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை ஒடுக்குவதற்காகவும், நகரில் குற்றங்களைக் குறைப்பதற்காகவும் 24 மணி நேர மொபைல் போலீஸ் சேவையைத் தற்போது தொடங்கியுள்ளோம்.
பாஜக தலைமையிலான கூட்டணி அரசு, குற்றங்கள் நடைபெறாத மாநிலமாக திரிபுராவை மாற்ற நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் மாநிலத்தில் போதைப் பொருள் புழக்கத்தை ஒழிக்க நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
மொபைல் போலீஸ் சேவை மூலம், பொதுமக்கள் இருந்த இடத்திலிருந்தே போலீஸாருக்குத் தகவல் கொடுக்கலாம். புகாரையும் பதிவு செய்யலாம். அவர்கள் காவல் நிலையம் செல்ல வேண்டிய தேவையில்லை.
சம்பவ இடத்துக்கு போலீஸார் விரைந்து வந்து நடவடிக்கை எடுப்பார்கள். தகவல் தொழில்நுட்ப உதவியுடன் போலீஸார் இங்கு சிறப்பாக செயல்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் நேரம் மீதமாவதுடன் குற்றங்களையும் விரைந்து தடுக்க முடியும்.
100 நாட்களை நிறைவு செய்துள்ள எங்கள் அரசு, ஊழல் இல்லாத வெளிப்படையான நிர்வாகத்தைக் கொடுத்துள்ளது. அரசு ஊழியர்களும், அதிகாரிகளும் தங்களுக்குக் கொடுத்த இலக்குகளை சிறப்பாக முடித்துள்ளனர். காவல் துறையில் 10 சதவீத இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படும்” என்றார்.
திரிபுராவில் பாஜக தலைமையிலான கூட்டணி அரசு பொறுப்பேற்று நேற்றுடன் 100 நாட்கள் நிறைவடைந்துள்ளன. அதைக் கொண்டாடும் வகையில் மொபைல் போலீஸ் திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. மொபைல் சேவைத் திட்டமானது, ஜிபிஎஸ் மற்றும் வயர்லெஸ் தொழில்நுட்பத்துடன் கண்காணிக்கப்படும் என்று போலீஸ் டிஜிபி அகில் குமார் சுக்லா தெரிவித்தார்.
இந்த மொபைல் போலீஸ் சேவையானது அனைத்து வசதிகளையும் ஒருங்கிணைத்த ஒரு போலீஸ் வாகனம் மூலம் வழங்கப்படும்.
ரோந்து பணியில் ஈடுபடும்அந்த வாகனம் அருகிலுள்ள போலீஸ் நிலையங்களுடன் ஜிபிஎஸ் வசதி மூலம் இணைக்கப்பட்டிருக்கும் என்றும் அகில் குமார் தெரிவித்தார். -ஐஏஎன்எஸ்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT