Published : 08 Jun 2018 08:26 AM
Last Updated : 08 Jun 2018 08:26 AM

காஷ்மீரில் கல்வியின் சக்தி மற்றும் விளையாட்டின் அற்புதத்தால் இளைஞர்களுக்கு பாதுகாப்பான எதிர்காலம்: மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி

கல்வியின் சக்தி மற்றும் விளையாட்டின் அற்புதத்தால் ஜம்மு காஷ்மீர் இளைஞர்களுக்கு பாதுகாப்பான எதிர்காலம் அளிக்க முடியும் என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார்.

ஜம்மு காஷ்மீரில் 2 நாள் பயணமாக ராஜ்நாத் சிங் நேற்று ஸ்ரீநகர் வந்துசேர்ந்தார். இங்கு விளையாட்டு நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசும்போது, “ஜம்மு காஷ்மீர் இளைஞர்களின் எதிர்காலம் குறித்து மத்திய அரசு கவலைப்படுகிறது. நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தாலும் குழந்தைகள் அனைவரும் ஒருவரே. இங்கு இளைஞர் சிலர் தவறான வழிகாட்டுதலால் கல்வீச்சில் ஈடுபடுகின்றனர். குழந்தைகள் தவறு செய்யலாம். எனவே கல்வீச்சில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு எதிரான வழக்குகளைத் திரும்பப் பெற கடந்த ஆண்டு இறுதியில் முடிவு செய்தோம்.

காஷ்மீர் இளைஞர்கள் வளர்ச்சிப் பாதையை தேர்வு செய்ய வேண்டும். காஷ்மீரை பிரதமர் நரேந்திர மோடி மிகவும் நேசிக்கிறார். இங்குள்ள இளைஞர்களுக்கு பாதுகாப்பான எதிர்காலத்தை அளிக்க வேண்டியது எங்கள் கடமை. கல்வியின் சக்தி மற்றும் விளையாட்டின் அற்புதத்தால் இதனை அளிக்க முடியும். காஷ்மீரில் விளையாட்டு கட்டமைப்புகளை மேம்படுத்த நிதி ஒரு பிரச்சினையாக இருக்காது. மாநில அரசின் உதவியுடன் இம்மாநிலத்தின் முகம் மற்றும் தலையெழுத்தை மாற்றியமைப்போம்” என்றார்.

ராஜ்நாத் செய்தியாளர்களிடம் கூறும்போது, “காஷ்மீரில் நிரந்தர அமைதி ஏற்படுத்த சரியான எண்ணம் கொண்ட அனைவருடனும் பேச்சு நடத்த மத்திய அரசு தயாராக உள்ளது. இளைஞர்களுக்கு தவறான வழிகாட்டுவது ஏமாற்றும் செயல் மட்டுமல்ல குற்றமும் ஆகும். இங்குள்ள நிலைமையை முழுமையாக ஆய்வு செய்த பிறகு தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கையை ரம்ஜானுக்கு பிறகு நீட்டிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும். தீவிரவாதத்தை பாகிஸ்தான் கட்டுப்படுத்த வேண்டும். முடியாவிட்டால் இதற்கு இந்தியாவின் உதவியை பெறவேண்டும்” என்றார். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x