Published : 26 Jun 2018 08:19 AM
Last Updated : 26 Jun 2018 08:19 AM

குடியிருப்புத் திட்டத்துக்காக டெல்லியில் மரங்களை வெட்ட ஜூலை 4-ம் தேதி வரை தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு

டெல்லியில் குடியிருப்புகள் புதுப்பிப்பு திட்டத்துக்காக மரங்களை வெட்டுவதற்கு, வரும் 4-ம் தேதி வரை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

அரசு உயரதிகாரிகளுக்கான குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்களை அமைப்பதற்காக தெற்கு டெல்லியில் புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மத்திய அரசு சார்பில் நடைபெறும் இத்திட்டத்தின் கீழ், 17 ஆயிரம் மரங்களை வெட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவானது, நீதிபதிகள் வினோத் கோயல், ரேகா பள்ளி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதாடும்போது, ‘‘டெல்லியில் சுற்றுச்சூழல் மாசுபாட்டின் அளவு அதிகரித்து வருகிறது. மரங்கள் வெட்டப்பட்டால் சுற்றுச்சூழல் மோசமாகிவிடும். எனவே, மரங்களை வெட்டுவதற்கு தடைவிதிக்க வேண்டும்’’ என்றார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘‘டெல்லியில் தற்போதைய சூழலில் 17 ஆயிரம் மரங்கள் வெட்டப்பட்டால் அந்த இழப்பை எவ்வாறு சமாளிக்க முடியும்? இதற்கு அனுமதி அளித்த தேசிய மரங்கள் ஆணையத்தையும் இவ்வழக்கில் பிரதிவாதியாக சேர்க்க வேண்டும். இவ்வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரும் 4-ம் தேதி நடைபெறும். அதுவரை, இந்தத் திட்டத்தின்கீழ் மரங்களை வெட்டக்கூடாது’’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x