ஆந்திர சட்டப்பேரவையில் பிற்படுத்தப்பட்டோருக்கு 33% இட ஒதுக்கீடு: அமைச்சரவையில் தீர்மானம்

ஆந்திர சட்டப்பேரவையில் பிற்படுத்தப்பட்டோருக்கு 33% இட ஒதுக்கீடு: அமைச்சரவையில் தீர்மானம்
Updated on
1 min read

அமராவதி: ஆந்திர அமைச்சரவை கூட்டம் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் அமராவதியில் நேற்று நடைபெற்றது.

இதில் சட்டப் பேரவையில்,பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்க ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் தேர்தல் வாக்குறுதியை முதல்வர் சந்திரபாபு நாயுடு நிறைவேற்றி உள்ளார். மேலும் மதுபான கடைகளை மீண்டும் தனியாருக்கே வழங்கி, தரமான மதுபானங்களை குறைந்த விலைக்கு கொடுப்பது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. குவார்ட்டர் ரூ.99-க்கு தரமானதாக வழங்கிட வேண்டுமெனவும், ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர் வாங்கும் அளவுக்கு விலை இருக்க வேண்டுமெனவும், அது வும் தரமான மதுபானங்களை மட்டுமே விற்க வேண்டுமெனவும் அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கடந்த ஜெகன் அரசு, அவரது ‘சாட்சி’ நாளிதழை மட்டுமே கிராம,வார்டு செயலகங்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு மாதம் ரூ.200 செலுத்தி அரசு சார்பில் வழங்கி வந்தது. இது குறித்து உடனடியாக விசாரணை நடத்தவும், சாட்சி நாளிதழ் வழங்குவதை நிறுத்தவும் முதல்வர் சந்திரபாபு நாயுடுஉத்தரவிட்டார். ஆதார் அட்டைபோன்று, மாணவ, மாணவிகளுக்கு தனி அடையாள அட்டையை அரசு தரப்பில் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.மக்களின் ஆரோக்கியத்தை கவனத்தில் கொண்டு ‘ஸ்டே மீ’ எனும் புதிய திட்டம் கொண்டு வரப்பட உள்ளது. உள்துறைக்கு புதிய கார்ப்பரேஷன் கொண்டு வரப்பட உள்ளது. இதற்காக ரூ. 10 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in