Published : 07 Aug 2014 09:00 AM
Last Updated : 07 Aug 2014 09:00 AM

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு 11-ம் தேதிக்கு ஒத்திவைப்பு: நீதிபதியின் உறவினர் மரணம்

தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்கும் நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹாவின் உறவினர் மரணமடைந்ததால், வழக்கு விசாரணை வரும் 11-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வ‌ழக்கு இறுதிக்கட்டத்தை எட்டியிருப்பதால் தினமும் விசாரித்து, விரைவில் தீர்ப்பை வெளியிட வேண்டும் என உச்ச நீதிமன்றம் பல முறை வலியுறுத்தியுள்ளது.

நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா, இவ்வழக்குக்கு நீண்ட‌ விடுமுறை அளிக்காமல் வாரத்தின் 5 நாட்களிலும் விசாரணை நடத்தி வருகிறார். கடந்த 3 மாதங்களாக அரசுத் தரப்பு வழக்கறிஞரின் இறுதி வாதம், குற்றம்சாட்டப்பட்ட நால்வரின் இறுதி வாதம் பதிவு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், நீதிபதி டி'குன்ஹாவின் மாமனார் உடல்நலக்குறைவு காரணமாக செவ்வாய்க்கிழமை இரவு காலமானார். அதனால் அவரது இறுதி ஊர்வலத்தில் பங்கேற்பதற்காக நீதிபதி மங்களூர் சென்றுள்ளார்.

இதனிடையே சசிகலா தரப்பின் இறுதிவாதத்தை நிகழ்த்த மணிசங்கர் உள்ளிட்ட பல வழக்கறிஞர்கள் புதன்கிழமை நீதிமன்றத்துக்கு வந்தனர். அப்போது நீதிபதியின் உறவினர் காலமானதையொட்டி, வழக்கு வரும் 11-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

அன்றைய தினம் வழக்கில் 3-வது மற்றும் 4-வது குற்றவாளிகளாக குற்றம் சாட்டப்பட்டுள்ள சுதாகரன் மற்றும் இளவரசியின் வழக்கறிஞர் அமித் தேசாய் இறுதி வாதம் நிகழ்த்துவார் எனத் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x