Published : 11 Jun 2018 08:49 AM
Last Updated : 11 Jun 2018 08:49 AM

நடிகர் சல்மான் கானை கொல்ல சதித் திட்டம்: ஹரியாணா போலீஸ் விசாரணையில் ரவுடி வாக்குமூலம்

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் கைது செய்யப்பட்ட சம்பத் நெஹ்ரா என்ற ரவுடி, பிரபல இந்தி நடிகர் சல்மான் கானை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டிய திடுக்கிடும் தகவல் போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

பிரபல கூலிப்படை தலைவன் லாரன்ஸ் பிஷ்னோய். இவரது தலைமையிலான கும்பல் சமூக வலைதளங்களில் தீவிரமாக செயல்பட்டு வந்தது. மான் வேட்டை வழக்கு தொடர்பாக இந்தி நடிகர் சல்மான் கானுக்கு கடந்த ஜனவரி மாதம் கொலை மிரட்டல் விடுத்திருந்தார் லாரன்ஸ். இந்த கும்பலைச் சேர்ந்தவர் சம்பத் நெஹ்ரா (28). துப்பாக்கியால் சுடுவதில் வல்லவரான இவர், கொலை, மிரட்டி பணம் பறித்தல், வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்தார். இந்நிலையில், சல்மானை கொல்லும் திட்டத்தை சம்பத்திடம் ஒப்படைத்துள்ளார் லாரன்ஸ்.

ஹரியாணா சிறப்பு அதிரடிப் படை போலீஸார் கடந்த 6-ம் தேதி சம்பத்தை ஹைதராபாத்தில் கைது செய்தனர். பின்னர் சம்பத்தை ஹரியாணாவுக்கு அழைத்துச் சென்ற போலீஸார், அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து ஹரியாணா போலீஸின் சிறப்பு அதிரடிப்படை டிஐஜி சதீஷ் பாலன் கூறியதாவது:

ரவுடி கும்பல் தலைவன் லாரன்ஸ் உத்தரவின் பேரில், கடந்த மே முதல் வாரத்தில் சம்பத் நெஹ்ரா மும்பை சென்று சல்மான் கான் வீட்டை நோட்டம் விட்டுள்ளார். அப்போது, சல்மான் கான் பால்கனி பக்கம் வந்து, வீட்டுக்கு முன்பு கூடியிருந்த ரசிகர்களைப் பார்த்து கையசைத்துள்ளார். அப்போது, பால்கனி எவ்வளவு தூரத்தில் உள்ளது என தெரிந்துகொள்ள முயன்றுள்ளார் சம்பத்.

மேலும் சில புகைப்படங்களும் எடுத்துள்ளார். இன்னொரு முறை நோட்டமிடவும் திட்டமிட்டுள்ளார். அதன் பின்னர் சல்மானை கொன்றுவிட்டு நாட்டைவிட்டு தப்பி ஓடவும் திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவ்வாறு ஹரியாணா போலீஸின் சிறப்பு அதிரடிப்படை டிஐஜி சதீஷ் பாலன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x