Published : 14 Jun 2018 08:00 AM
Last Updated : 14 Jun 2018 08:00 AM

ஏழுமலையான் கோயிலுக்கு களங்கம் விளைவிப்பதா?- முன்னாள் பிரதான அர்ச்சகர், எம்பி.க்கு நோட்டீஸ்: திருப்பதி தேவஸ்தானம் நடவடிக்கை

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதாக முன்னாள் பிரதான அர்ச்சகர் ரமண தீட்சிதர், மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் எம்பி. விஜய்சாய் ரெட்டி ஆகிய இருவருக்கும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் விளக்கம் கேட்டு சட்டப்படி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் கடந்த 24 ஆண்டுகளாக பிரதான அர்ச்சகர்கர்களில் ஒருவராக வம்சாவளியாக பணியாற்றி வந்தவர் ரமண தீட்சிதர். ஆகம விதிகளுக்குட்பட்டு தேவஸ்தான அதிகாரிகள் நடப்பதில்லை, மற்றும் ஏழுமலையானுக்கு அரசர்கள் காலத்தில் வழங்கப்பட்ட பல கோடி மதிப்புள்ள ஆபரணங்கள் காணவில்லை என ரமண தீட்சிதர் பகிரங்கமாக புகார்கள் தெரிவித்தார். கடந்த மாதம் 15-ம் தேதி சென்னை பத்திரிக்கையாளர் சங்கத்திலும் ரமண தீட்சிதர் மற்றும் சில அர்ச்சகர்கள் இதே குற்றச்சாட்டை முன்வைத்தனர். சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று ரமண தீட்சிதர் கோரியதுடன் பாஜக தலைவர் அமித் ஷா, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோரை சந்தித்து முறையிட்டார். இதனிடையே, ரமண தீட்சிதருக்கு 65 வயதுக்கும் மேல் ஆகிவிட்டதால், அவரை உடனடியாக பணியில் இருந்து நீக்குவதாக தேவஸ்தானம் அறிவித்தது.

இந்த விவகாரத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்பி. விஜயசாய் ரெட்டியும் முதல்வர் சந்திரபாபு நாயுடு மீது குற்றம்சாட்டினார். திருமலையில் பிரசாதங்கள் தயாரிக்கும் இடத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சில விலை உயர்ந்த நகைகளை தேவஸ்தானத்தினர் யாருக்கும் தெரியாமல், முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் ஒப்படைத்ததாக அவர் குற்றம் சாட்டியிருந்தார். சந்திரபாபு நாயுடுவின் வீட்டை சிபிஐ அதிகாரிகள் சோதனையிட்டால் இந்த நகைகள் வெளிவரும் எனவும் அவர் விசாகப்பட்டினத்தில் பேசினார். தற்போது, இது தொடர்பாக, திருப்பதி தேவஸ்தானத்திற்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதாகவும் பக்தர்களை குழப்பும் விதமாகவும் புண்படும்படியும் அறிக்கை வெளியிட்டதாகவும் முன்னாள் தலைமை அர்ச்சகர் ரமண தீட்சிதர் மற்றும் எம்பி. விஜய்சாய் ரெட்டி ஆகிய இருவருக்கும் இது குறித்து விளக்கம் கேட்டு நேற்று திருப்பதி தேவஸ்தானம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நீதிமன்றத்தில் கேவியட் மனு

ஏழுமலையான் கோயிலின் பிரதான அர்ச்சகரான வேணுகோபால தீட்சிதர் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு போட்டுள்ளார். தேவஸ்தானத்தினால் நீக்கப்பட்ட முன்னாள் பிரதான அர்ச்சகர் ரமண தீட்சிதர், தன்னை நீக்கியது செல்லாது எனவோ, அல்லது புதிய பிரதான அர்ச்சகரை நியமனம் செய்தது செல்லாது என்றோ உச்ச நீதிமன்றத்தை நாடுவதற்கு முன்பாகவே, தற்போதைய பிரதான அர்ச்சகர் வேணுகோபால தீட்சிதர் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். இதனால், மேலும் 90 நாட்களுக்கு இவர் மீது எந்த வழக்கும் தொடுக்க இயலாது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x