Published : 05 Aug 2014 08:30 AM
Last Updated : 05 Aug 2014 08:30 AM

வங்கக்கடலில் மாயமான 40 படகுகள் கரை திரும்புகின்றன: 7 மீனவர்களைக் காணவில்லை

மேற்கு வங்க மாநிலம் தெற்கு பர்கானாஸ் மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 540 மீனவர்கள் 40 படகுகளில் வங்கக்கடலில் மீன்பிடிக்க ஞாயிற்றுக்கிழமை சென்றனர். அப்போது, சூறாவளிக் காற்று காரணமாக காகத்தீவு (காகத்வீப்) பகுதியில் 40 படகுகளும் மாயமாயின.

இந்நிலையில் மாயமான 40 படகுகளும் திங்கள்கிழமை கண்டுபிடிக்கப்பட்டன. அதில் 2 படகுகள் ஜம்புத்தீவிலிருந்து 10 கி.மீ தொலைவில் கவிழ்ந்தன. அதில் சென்ற 32 மீனவர்களில் 25 பேர் மீட்கப்பட்டனர். 7 பேரைக் காணவில்லை.

40 படகுகளும் தற்போது பாதுகாப்பாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு படகிலும் சுமார் 16 மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். படகுகள் மாயமானதை அடுத்து கடற்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

காகத்தீவில் படகுகள்

இது தொடர்பாக மீன்வளத் துறை உதவி இயக்குநர் கிரண் லால்தாஸ் கூறும்போது, “30 மீன்பிடி படகுகள் ஒடிஸாவின் தாம்ரா துறைமுகத்தில் பாதுகாப்பாக உள்ளன. மற்ற 10 படகுகள் மேற்கு மிட்னாபூர் கடற்கரைப் பகுதியில் பாதுகாப்பாக உள்ளன. தற்போது அனைத்து படகுகளும் காகத்தீவு நோக்கி வந்து கொண்டிருக்கின்றன” என்றார்.

சுந்தரவனக் காடுகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மண்டூரம் பாகீரா கூறும்போது, “காணாமல் போன 7 மீனவர்களைத் தேடும் பணியில் கடலோரக் காவல் படையினர் ஈடுபட்டுள்ளனர்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x