Published : 17 Jun 2018 09:57 AM
Last Updated : 17 Jun 2018 09:57 AM
ஐஏஎஸ் அதிகாரிகளின் வேலைநிறுத்தம் மூலம் டெல்லியில் அறிவிக்கப்படாத குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெறுவதாக முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.
டெல்லி அரசின் தலைமைச் செயலாளர் அன்ஷு பிரகாஷை சில மாதங்களுக்கு முன்பு ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் சிலர் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் பணிபுரியும் ஐஏஎஸ் அதிகாரிகள், மாநில அரசு கூட்டங்களில் பங்கேற்பதை 4 மாதங்களாக புறக்கணித்து வருகின்றனர். இதன் காரணமாக, டெல்லியில் பல்வேறு நலத்திட்ட பணிகளை செயல்படுத்த முடியாத சூழ்நிலை நிலவுகிறது.
இந்தப் பணிப் புறக்கணிப்பு நடவடிக்கையை திரும்பப் பெறுவதற்கு, ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி, டெல்லி ஆளுநர் அனில் பய்ஜால் அலுவலகத்தின் வரவேற்பறையில் அமர்ந்து கேஜ்ரிவால் தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார்.
நேற்றுடன் இந்தப் போராட்டம் 6-வது நாளை எட்டியுள்ளது. இந்தப் பிரச்சினையை சுட்டிக்காட்டி, கேஜ்ரிவாலின் ட்விட்டர் பக்கத்தில் ஒருவர் நேற்று ஒரு கருத்தை பதிவிட்டிருந்தார்.
அதில், ஐஏஎஸ் அதிகாரிகள் வேலைநிறுத்தத்தை பார்க்கும்போது டெல்லியில் அறிவிக்கப்படாத குடியரசுத் தலைவர் ஆட்சி நடப்பது போல் உள்ளது என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அந்தக் கருத்துக்கு நேற்று ட்விட்டரில் பதிலளித்த கேஜ்ரிவால், “ஆம், ஐஏஎஸ் அதிகாரிகளின் வேலைநிறுத்தம் மூலமாக டெல்லியில் அறிவிக்கப்படாத குடியரசுத் தலைவர் ஆட்சிதான் நடைபெறுகிறது” எனத் தெரிவித்துள்ளார். - பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT