குஜராத் மாநிலத்தில் ரூ.3,300 கோடியில் செமிகண்டக்டர் ஆலை நிறுவ மத்திய அரசு ஒப்புதல்
புதுடெல்லி: குஜராத் மாநிலம் சனாந்த் நகரில் ரூ.3,300 கோடி மதிப்பில் செமிகண்டக்டர் ஆலை அமைக்க கெய்ன்ஸ் நிறுவனத்துக்கு மத்தியஅமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் சமீபத்தில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இந்த ஒப்புதல் வழங்கப்பட்டது.
இது இந்தியாவில் அமையவிருக்கும் 5-வது செமிகண்டக்டர் (சிப்) ஆலை ஆகும். இந்த ஆலை,நாளொன்றுக்கு 60 லட்சம் சிப்களைத் தயாரிக்கும். இவை, ஆட்டோமோட்டிவ், மின்னணு வாகனங்கள், மின்னணு சாதனங்கள், மொபைல் போன்கள்,தொலைதொடர்பு சாதனங்கள்உள்ளிட்டவற்றில் பயன்படுத்தப்படும். தற்போது உலக நாடுகள் மின்னணு வாகனங்கள் நோக்கி நகர்ந்து வருகிற நிலையில், செமிகண்டக்டருக்கான தேவை அதிகரித்துள்ளது. இந்தியா அதன்பயன்பாட்டுக்கான செமிகண்டக்டரை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து வந்த நிலையில், உள்நாட்டிலேயே செமிகண்டக்டர் தயாரிப்பு கட்டமைப்பை உருவாக்கும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியது.
இதற்காக 2021 டிசம்பர் மாதம் ரூ.76,000 நிதி ஒதுக்கீட்டில் புதிய திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக, குஜராத்தில் செமிகண்டக்டர் ஆலை அமைக்க கடந்த ஆண்டு மைக்ரான் நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம்மேற்கொண்டது. இதன்படி, மைக்ரான் நிறுவனம் குஜராத்தின் சனாந்த் நகரில் ரூ.22,500 கோடி முதலீட்டில் செமிகண்டக்டர் ஆலை அமைத்து வருகிறது. இதைத் தொடர்ந்து இவ்வாண்டு பிப்ரவரி மாதம் மேலும்3 ஆலைகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இதன்படி, டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தைவானின் பவர்சிப் செமிகண்டக்டர் நிறுவனத்துடன் இணைந்து ரூ.91 ஆயிரம் கோடி மதிப்பில் குஜராத் மாநிலம் தோலேராவில் செமிகண்டக்டர் ஆலையை அமைக்கிறது.
டாடா செமிகண்டக்டர் அசெம்ப்ளி நிறுவனம் ரூ.27 ஆயிரம்கோடி முதலீட்டில் அசாம் மாநிலம்மோரிகானிலும், சிஜி பவர் நிறுவனம் ஜப்பானின் ரெனசாஸ் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தாய்லாந்தின் ஸ்டார்ஸ் மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ் நிறுவனங்களுடன் இணைந்து ரூ.7,600 கோடி முதலீட்டில் குஜராத் சனாந்த் நகரிலும் செமிகண்டக்டர் அசெம்ப்ளி ஆலையை அமைக்கின்றன.
