புருனேயில் பிரதமர் மோடிக்கு இந்தியர்கள் உற்சாக வரவேற்பு

புருனேயில் பிரதமர் மோடிக்கு இந்தியர்கள் உற்சாக வரவேற்பு
Updated on
1 min read

புதுடெல்லி: அரசுமுறை பயணமாக புருனே சென்றுள்ள பிரதமர் மோடிக்கு தலைநகர் பண்டார் செரி பெக வானில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பிரதமர் மோடி அரசுமுறை பயணமாக தென்கிழக்கு ஆசிய நாடான புருனேக்கு நேற்று சென்றார். தலைநகர் பண்டார் செரி பெகவானில், அவரை பட்டத்து இளவரசரும். மூத்த அமைச்சருமான ஹாஜி அல் - முஹ்தாதி பில்லா வரவேற்றார். புருனேவில் உள்ள இந்திய தூதரகத்தில் கட்டப்பட்டுள்ள புதிய வளாகத்தை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்தியர்கள், பிரதமர் மோடியை உற்சாகத்துடன் வர வேற்றனர். விண்வெளி, பாதுகாப்பு துறைகளில் இணைந்து செயல்படுவது தொடர்பாக புருனே சுல்தான் ஹாஜி ஹசனல் போல்கியாவுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துகிறார். இதைத் தொடர்ந்து, சிங்கப்பூருக்கும் பிரதமர் மோடி செல்கிறார்.

புருனே புறப்பட்டு செல்வதற்கு முன்பு பிரதமர் மோடி நேற்று வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது: புருனேக்கு இந்திய பிரதமர் செல்வது இதுவே முதல் முறை. அங்கு சுல்தான் ஹாஜி ஹசனல் போல்கியா மற்றும் மன்னர் குடும்ப உறுப்பினர்களை சந்தித்து பேசுகிறேன். அதன்பிறகு, சிங்கப்பூர் பயணத்தில் அதிபர் தருமன் சண்முகரத்னம், பிரதமர் லாரன்ஸ் வாங் மற்றும் மூத்த அமைச்சர்களை சந்தித்து பேச உள்ளேன். அங்கு உள்ள தொழிலதிபர்களையும் சந்திக்கிறேன். புருனே, சிங்கப்பூர் ஆகிய 2 நாடுகளும், இந்தியாவின் கிழக்கு கொள்கை, இந்தோ-பசிபிக் தொலைநோக்கு திட்டத்தில் முக்கிய நட்பு நாடுகளாக உள்ளன. எனது பயணம் இரு நாடுகள் உடனான உறவை மேலும் வலுப்படுத்தும். இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

புருனே ஆட்சியாளர் சுல்தான் ஹசனல் போல்கியாவை அவரது ‘இஸ்தானா நூரும் இமான்’ அரண்மனையில் பிரதமர் மோடி சந்திக்கிறார். உலகின் மிகப் பெரிய அரண்மனையான இது 2 லட்சம் சதுர மீட்டர் பரப்பில் கட்டப்பட்டுள்ளது. இந்த அரண்மனையின் மத்திய மாடத்தில் 22 காரட் தங்கத் தகடுகள் பதிக்கப்பட்டுள்ளன. இதில் 1,788 அறைகள், 257 குளியல் அறைகள், 5 நீச்சல் குளங்கள் உள்ளன. இதன் விருந்தினர் அரங்கத்தில் 5,000 பேருக்கு விருந்தளிக்க முடியும். கார்கள் மீது மிகுந்த நாட்டம் உள்ளவர் புருனே சுல்தான் ஹாஜி ஹசனல். இவருக்கு சொந்தமாக 7,000-க்கும் மேற்பட்ட கார்கள் உள்ளன. இவற்றில் 600 ரோல்ஸ் ராய்ஸ், 450 பெராரி, 380 பென்ட்லே கார்கள் என்பது குறிப் பிடத்தக்கது. புருனே பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி இன்று சிங்கப்பூர் செல்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in