

தண்டேவாடா: சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தார் பகுதியில் செவ்வாய்க்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் 9 நக்சலைட்கள் கொல்லப்பட்டதாக மூத்த போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.
இதுகுறித்து பஸ்தார் பகுதி போலீஸ் ஐ.ஜி. சுந்தரராஜ் கூறுகையில், "நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையில் பாதுகாப்புப் படையினரின் கூட்டுக்குழு ஈடுபட்டிருந்தபோது, தண்டேவாடா மற்றும் பிஜாபூர் மாவட்டங்களின் எல்லையோரம் உள்ள காட்டுப்பகுதியில் இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தது. பாதுகாப்புப் படையினரின் மேற்கு பஸ்தார் பிரிவு குழு நக்சலைட்கள் நடமாட்டம் இருப்பது பற்றி அளித்த தகவலின் படி, மாவட்ட ரிசர்வ் கார்டு (டிஆர்ஜி) மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆப்பிஎஃப்) ஆகியவற்றைச் சேர்ந்த வீரர்கள் இந்த தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்டனர்.
பாதுகாப்புப் படையினர் மற்றும் நக்சலைட்களுக்கு இடையே நடந்த துப்பாக்கிச் சண்டை நீண்ட நேரம் நீடித்தது. இதனைத் தொடர்ந்து இந்தப் பகுதியில் இருந்து சீருடை அணிந்த 9 நக்சலைட்களின் உடல்கள் கைப்பற்றப்பட்டன. இந்த துப்பாக்கிச் சூடுநடந்த இடத்தில் இருந்து அதிக அளவில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படை வீரர்கள் பாதுகாப்பாக உள்ளனர், அந்தப் பகுதியில் தேடுதல் வேட்டை தொடர்கிறது” என்று அவர் தெரிவித்தார். பஸ்தார் பகுதி என்பது தண்டேவாடா மற்றும் பிஜாபூர் ஆகியவற்றின 7 மாவட்டங்களை உள்ளடக்கியது.
இதனிடையே, செவ்வாய்க்கிழமை துப்பாக்கிச் சூடு உயிரிழப்பினைத் தொடர்ந்து இந்த ஆண்டு சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 154 நக்சலைட்டுகள் உயிரிழந்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.