Last Updated : 01 Jun, 2018 08:25 AM

 

Published : 01 Jun 2018 08:25 AM
Last Updated : 01 Jun 2018 08:25 AM

கர்நாடக மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே.சிவகுமார் வீட்டில் சிபிஐ சோதனை: பாஜகவின் பழிவாங்கும் நடவடிக்கை என குற்றச்சாட்டு

கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமாரின் வீடு மற்றும் அலுவலகங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தினர். இது பாஜகவின் பழிவாங்கும் நடவடிக்கை என டி.கே.சிவகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.

கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான டி.கே.சிவகுமார் அம்மாநில அரசியலில் முக்கியப் புள்ளி ஆவார். சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பின்னர், பாஜகவுக்கு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அணி மாறாமல் தடுத்ததிலும், குமாரசாமி தலைமையிலான அரசு அமைந்ததிலும் டி.கே.சிவகுமார் முக்கிய பங்காற்றினார். இதனால், பாஜகவுக்கு டி.கே.சிவகுமார் சிம்மசொப்பனமாக விளங்குவதாக பரவலாக பேசப்பட்டு வந்தது.

இந்நிலையில், டி.கே.சிவகுமாருக்கு சொந்தமாக பெங்களூரு, கனகபுரா ஆகிய இடங்களில் உள்ள வீடு மற்றும் அலுவலகங்களில் நேற்று சிபிஐ அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். மேலும், அவரது தம்பியும், காங்கிரஸ் எம்.பி.யுமான சுரேஷ் மற்றும் அவரது நண்பர்கள், ஆதரவாளர்கள் உட்பட 9 பேரின் வீடுகளிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

ஆவணங்கள் பறிமுதல்

இதில், பணமதிப்பு நீக்க நடவடிக்கையின்போது மாற்றப்பட்ட பணம் தொடர்பான சில ஆவணங்களை பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த சோதனைக்கு பிறகு, பெங்களூருவில் டி.கே.சிவகுமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

என் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தியிருப்பது பாஜகவின் பழிவாங்கும் நடவடிக்கை. திட்டமிட்டு இத்தகைய தாக்குதல் நடத்தப்படுகிறது.

கடந்த ஆண்டு 2 முறை வருமான வரிசோதனை, அமலாக்கத்துறை சோதனை நடத்தப்பட்டது. sவருமான வரித்துறை, அமலாக்கத் துறை, சிபிஐ ஆகியவற்றை தங்கள் அரசியல் எதிரிகளை அழிக்கும் கருவியாக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு பயன்படுத்தி வருகிறது. இதனை சட்டரீதியாக நான் எதிர்கொள்வேன் என அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x