மழைகாலத்தில் காவிரியில் கர்நாடகா திறந்த உபரி நீரை கணக்கில் கொள்ள கூடாது: மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்

தமிழக - கர்நாடக எல்லையில் காவிரி நீரை அளவிடும் பிலிகுண்டுலு பகுதி.
தமிழக - கர்நாடக எல்லையில் காவிரி நீரை அளவிடும் பிலிகுண்டுலு பகுதி.
Updated on
1 min read

புதுடெல்லி: கர்நாடக அரசு மழை காலங்களில் திறந்துவிட்ட உபரி நீரை கணக்கில் எடுத்துக்கொள்ள கூடாது என டெல்லியில் நடந்த‌ காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 33-வ‌து கூட்டம் டெல்லியில் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழக அரசின் சார்பில்நீர்வளத் துறை செயலர் மணிவாசன், காவிரிதொழில்நுட்ப குழு தலைவர் ஆர்.சுப்பிரமணியம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதேபோல, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநிலங்களை சேர்ந்த நீர்ப்பாசனத் துறை அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

அப்போது கர்நாடக அரசின் சார்பில், ‘‘காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் கிருஷ்ணராஜசாகர், கபினி உள்ளிட்ட 4 அணைகளும் முழு கொள்ளள‌வை எட்டியுள்ளன. இதனால், உச்ச நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளதைவிட தமிழகத்துக்கு ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் நீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த பருவமழை காலத்தில் மட்டும் 90 டிஎம்சி நீர் தமிழகத்துக்கு திறக்கப்பட்டுள்ளது''என்று தெரிவித்தனர்.

இதற்கு த‌மிழக அரசின் சார்பில், ‘‘இந்தஆண்டில் கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு காவிரி நீர் முறையாக வந்துகொண்டிருக்கிறது. அங்கு அதிக அளவில் மழை பெய்துள்ளதால் 110 டிஎம்சி நீர் அணைகளில் இருப்பு உள்ளது. அதிக மழைப்பொழிவின் காரணமாக அணைகளுக்கு கிடைத்த‌ உபரி நீரை மட்டுமே கர்நாடக அரசு தமிழகத்துக்கு காவிரியில் திறந்து விட்டுள்ளது. இந்த உபரி நீரை அணையில் இருந்து திறக்கப்பட்ட நீராக கணக்கில் எடுத்துக்கொள்ள கூடாது. உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, தமிழகத்துக்கு செப்டம்பரில் வழங்க வேண்டிய 36.7 டிஎம்சி நீரை கர்நாடகா திறந்துவிட வேண்டும்'' என்று வலியுறுத்தினர்.

நிறைவாக, ஆணையத்தின் தலைவர்எஸ்.கே.ஹல்தர் பேசும்போது, ‘‘கடந்த 2 மாதமாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் நீர் பங்கீட்டில் எவ்வித சிக்கலும் இல்லை. அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவை கண்காணிப்பது குறித்து 2 மாநில அதிகாரிகளுக்கும் உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்படும். ஆகஸ்ட் இறுதி வாரத்தில் நடைபெறும் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் வழங்கப்படும் பரிந்துரைகள் குறித்து அடுத்த கூட்டத்தில் விவாதிக்கப்படும்'' என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in