Published : 15 May 2018 07:23 AM
Last Updated : 15 May 2018 07:23 AM

ஆந்திர மாநிலத்தில் பாத யாத்திரை மூலம் 2,000 கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்தார் ஜெகன்மோகன் ரெட்டி

ஆந்திர மாநில எதிர்க்கட்சித் தலைவரான ஜெகன்மோகன் ரெட்டி, இப்போது மாநிலத்தில் உள்ள 13 மாவட்டங்களிலும் ‘பிரஜா சங்கல்ப யாத்திரா’ எனும் பெயரில் பாத யாத்திரை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் அவர் நேற்று மேற்கு கோதாவரி மாவட்டத்தில் 2,000 கி.மீ தூரத்தை கடந்தார்.

ஆந்திர மாநிலத்தில், அரசியல் கட்சித் தலைவர்கள் பாத யாத்திரை மேற்கொள்வது வாடிக்கையாக உள்ளது. கடந்த 2003-ம் ஆண்டு, தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்தபோது, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி பாத யாத்திரை மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து ராஜசேகர ரெட்டி, 2004-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று முதல்வரானார்.

இதைத் தொடர்ந்து 2009-ல் நடைபெற்ற தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. ராஜசேகர ரெட்டி 2-வது முறையாக முதல்வரானார். ஆனால், அவர் ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்தார். இதையடுத்து கே.ரோசய்யா முதல்வரானார். இதனிடையே, அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவும் பாத யாத்திரை மேற்கொண்டார். மாநில பிரிவினைக்குப் பிறகு 2014-ல் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று முதல்வரானார்.

இப்போது, எதிர்க்கட்சித் தலைவராக உள்ள ராஜசேகர ரெட்டியின் மகனும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி, கடந்த ஆண்டு நவம்பர் 6-ம் தேதி கடப்பாவில் ‘பிரஜா சங்கல்ப யாத்திரா’ என்ற பெயரில் பாத யாத்திரை தொடங்கினார். வழிநெடுகிலும் இவரிடம் திரளான பொதுமக்கள் மனுக்களை கொடுத்தும், ஆளும் கட்சியின் குறைபாடுகளை கூறியும் வருகின்றனர்.

இந்நிலையில், அவர், நேற்று மேற்கு கோதாவரி மாவட்டம், ஏலூரு மண்டலம், வெங்கடாபுரம் எனும் இடத்தில் 2,000 கி.மீ தொலைவைக் கடந்தார். அப்போது அவரை கட்சி தொண்டர்கள் பலத்த கரகோஷத்துடன் வரவேற்றனர். பின்னர் அவர், ஏலூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x