Published : 12 Aug 2014 10:00 AM
Last Updated : 12 Aug 2014 10:00 AM

மக்களவையில் தேசிய நீதித்துறை நியமன ஆணைய மசோதா அறிமுகம்

தேசிய நீதித்துறை நியமன ஆணைய (2014) மசோதாவையும், அது தொடர்பான அரசியல் சாசன சட்டத்திருத்த மசோதாவையும் மக்களவையில் மத்திய அரசு திங்கள்கிழமை அறிமுகம் செய்தது.

இந்த மசோதாக்களை மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் அறிமுகம் செய்தார். உயர் நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் நீதிபதிகள் நியமனம், பணியிட மாற்றம் தொடர்பான செயல்களை தேசிய நீதித்துறை நியமன ஆணையம் மேற்கொள்வதற்கு இந்த மசோதாக்கள் வகை செய்கின்றன. இப்போது நீதிபதிகளை கொண்ட ‘கொலீஜியம்’ என்ற குழுதான் நியமனங்களை மேற்கொண்டு வருகிறது.

6 பேர் குழு

தேசிய நீதித்துறை நியமன ஆணையம், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் தலைமையின் கீழ் செயல்படும். உச்ச நீதிமன்றத்தைச் சேர்ந்த 2 நீதிபதிகள், மத்திய சட்டத்துறை அமைச்சர், சமூகத்தில் மிகவும் மதிக்கப்படும் 2 பேர் ஆகியோர் இக்குழுவில் உறுப்பினர்களாக இருப்பார்கள். இக்குழுவுக்கான சமூகத்தில் மதிக்கத்தக்க 2 பேரை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியும் பிரதமரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் அல்லது அதிக உறுப்பினர்களைக் கொண்ட எதிர்க்கட்சியின் தலைவர் ஆகியோரும் தேர்ந்தெடுப்பார்கள்.

நீதிபதிகளை நியமனம் செய்வது தொடர்பாக தேசிய நீதித்துறை நியமன ஆணையத்தின் 2 உறுப்பினர்கள் ஆட்சேபம் தெரிவித்தால் கூட, அவற்றை குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்ய முடியாது.

தனக்கு வரும் பரிந்துரைப் பட்டியல் தொடர்பாக ஆட்சேபம் இருந்தால், அதை திருப்பி அனுப்பி மீண்டும் பரிசீலனை செய்யுமாறு கூற குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உள்ளது. அவ்வாறு பரிசீலித்த பின்பு, நீதித்துறை நியமன ஆணையம் மீண்டும் அதே பட்டியலை அனுப்புவது என்று ஒருமனதாக தீர்மானித்தால், அதை குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

நீதிபதிகள் நியமனங்கள் மற்றும் பணியிட மாற்றம் தொடர்பாக சம்பந்தப்பட்ட மாநிலங்களின் ஆளுநர்கள், முதல்வர்களிடம் நியமன ஆணையம் கருத்து கேட்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x