Published : 30 May 2018 07:31 AM
Last Updated : 30 May 2018 07:31 AM

இந்தோனேசியா சென்றடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி: அதிபர் ஜோகோ விடோடோவை இன்று சந்திக்கிறார்

தெற்கு ஆசிய நாடுகள் பயணத் தின் தொடக்கமாக, பிரதமர் நரேந்திர மோடி நேற்று இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தா சென்றடைந்தார். இன்று அந்நாட்டு அதிபரை சந்தித்துப் பேசுகிறார்.

இதுகுறித்து பிரதமர் அலுவலக ட்விட்டர் பக்கத்தில், “பிரதமர் நரேந்திர மோடி இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகருக்கு புறப்பட்டுச் சென்றார். அடுத்தடுத்த நாட்களில் இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு அவர் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். இந்தப் பயணத்தின்போது பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்” என பதிவிடப்பட்டுள்ளது.

இந்தோனேசியா புறப்படுவதற்கு முன்பு பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில், “கிழக்கு நாடுகளை நோக்கிய நம்முடைய கொள்கையை மேலும் பலப்படுத்த எனது 3 நாடுகள் பயணம் மிகவும் உறுதுணையாக இருக்கும். குறிப்பாக அந்த 3 நாடுகளுடனான உறவை பலப்படுத்தவும் உதவும்” என கூறப்பட்டுள்ளது.

இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோவை பிரதமர் மோடி இன்று சந்தித்து, இருதரப்பு உறவை பலப்படுத்துவது குறித்து விரிவாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். பின்னர், அங்குள்ள இந்தியர்கள் மத்தியில் உரையாற்றும் அவர் முன்னணி நிறுவன தலைமை செயல் அதிகாரிகளுடன் கலந்துரையாட உள்ளார்.

இந்தோனேசிய பயணத்தை முடித்துக் கொள்ளும் பிரதமர் மோடி, நாளை மலேசிய தலைநகர் கோலாலம்பூர் செல்கிறார். அங்கு அங்கு புதிதாக பொறுப்பேற்றுள்ள அந்நாட்டு பிரதமர் டாக்டர் மஹாதிர் முகமதுவை (92) சந்தித்துப் பேச உள்ளார்.

இதையடுத்து சிங்கப்பூர் செல்லும் மோடி, ஜூன் 1-ம் தேதி அந்நாட்டு அதிபர் ஹலிமா யாகூப் மற்றும் பிரதமர் லீ சீன் லூங் ஆகியோரை சந்தித்துப் பேச உள்ளார். - ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x