Published : 17 May 2018 07:43 AM
Last Updated : 17 May 2018 07:43 AM

ரம்ஜான் மாதத்தை முன்னிட்டு ஜம்மு-காஷ்மீரில் ராணுவ நடவடிக்கை நிறுத்தம்: மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

முஸ்லிம்களின் புனித மாதமான ரம்ஜான் தொடங்கி உள்ளது. இதையடுத்து காஷ்மீரில் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்று அம்மாநில முதல்வர் மெகபூபா முப்தி வேண்டுகோள் விடுத்திருந்தார். இதன் அடிப்படையில், காஷ்மீர் மாநிலத்தில் ராணுவ நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என பாதுகாப்புப் படையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதேநேரம், தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினாலோ அப்பாவி மக்களின் உயிரைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டாலோ பதில் தாக்குதல் நடத்த பாதுகாப்புப் படையினருக்கு உரிமை உள்ளது. அரசின் இந்த முயற்சிக்கு காஷ்மீர் மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கி, முஸ்லிம் சகோதர சகோதரிகள் ரம்ஜான் நோன்பை கடைப்பிடிப்பதற்கு ஏதுவாக அமைதியான சூழலை உருவாக்க உதவுவார்கள் என்று அரசு எதிர்பார்க்கிறது.

தீவிரவாதம் மற்றும் வன்முறையை ஏவி இஸ்லாமியர்களுக்கு அவப்பெயரை ஏற்படுத்த விரும்பும் சமூகவிரோத சக்திகளை இந்த நேரத்தில் தனிமைப்படுத்த வேண்டியது மிகவும் முக்கியம் என்பதை அனைவரும் உணர வேண்டும்.

இவ்வாறு மத்திய உள்துறை அமைச்சக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. - ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x