Published : 29 May 2018 06:44 AM
Last Updated : 29 May 2018 06:44 AM
‘‘எனது அம்மாவின் சிகிச்சைக்காக வெளிநாடு செல்கிறேன். பாஜக சமூக வலைதள நண்பர்கள் கவலைப்பட வேண்டாம். விரைவில் திரும்பி விடுவேன்’’ என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணித் தலைவராக சோனியா காந்தி இருக்கிறார். இவர் கடந்த 2011-ம் ஆண்டு அமெரிக்காவில் அறுவைச் சிகிச்சை செய்து கொண்டார். தற்போது மீண்டும் சிகிச்சை பெற கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வெளிநாடு சென்றார். அவருடன் காங்கிரஸ் தலைவரும் சோனியாவின் மகனுமான ராகுல் காந்தியும் உடன் சென்றுள்ளார்.
தனது வெளிநாட்டு பயணம் குறித்து ட்விட்டரில் ராகுல் காந்தி செய்தி வெளியிட்டுள்ளார். அதில் பாஜக.வையும் கிண்டல் செய்துள்ளார். ராகுல் காந்தி ட்விட்டரில் கூறியிருப்பதாவது: என்னுடைய அம்மா சோனியா காந்திக்கு ஆண்டு மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு செல்கிறேன். சில காலம் இந்தியாவில் இருக்க மாட்டேன். பாஜக சமூக வலைதள பிரிவு ட்ரால் நண்பர்களுக்கு: நான் வெளிநாடு செல்வதால் கவலைப்பட வேண்டாம். விரைவில் நான் நாடு திரும்புவேன். இவ்வாறு ராகுல் காந்தி கூறியுள்ளார்.
ராகுல் காந்தியை விமர்சித்து வலைதளங்களில் பாஜக.வினர் பல கருத்துகளை வெளியிடுகின்றனர். அதை கிண்டல் செய்யும் விதமாக ட்விட்டரில் ராகுல் கருத்து கூறியுள்ளார். இதற்கு பதில் அளித்து பாஜக வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
சோனியா காந்தி உடல்நலம் பெற வாழ்த்துகிறோம். கர்நாடகாவில் உள்ள பெண்கள், அமைச்சரவை உருவாக்கி அரசு செயல்பட வேண்டும் என்று காத்திருக்கின்றனர்.
நீங்கள் வெளிநாடு செல்வதற்கு முன்னர், செயல்படும் அரசு கர்நாடகாவுக்குக் கிடைப்பதை உங்களால் உறுதி செய்ய முடியுமா? நீங்கள் வெளிநாட்டில் இருந்தாலும், அங்கிருந்தே எங்களை எல்லாம் மகிழ்விப்பீர்கள் என்று சமூக வலைதளங்களில் இருக்கும் அனைவரும் நம்பிக்கையுடன் இருக்கின்றனர்.இவ்வாறு பாஜக ட்விட்டரில் கூறியுள்ளது.- பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT