Published : 26 May 2018 08:07 AM
Last Updated : 26 May 2018 08:07 AM
நீட் தேர்வு முடிவுகளின் அடிப்படையிலேயே தனியார் மருத்துவக் கல்லூரியில் உள்ள முதுநிலை பட்டப்படிப்பு காலியிடங்களை நிரப்பவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்திலுள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் முதுநிலை பட்டப்படிப்பு காலியிடங்கள் தொடர்பான மனு மீதான விசாரணை நேற்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கர், இந்து மல்ஹோத்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
இதையடுத்து வழக்கின் பிரதிவாதிகளாகச் சேர்க்கப்பட்டிருந்த இந்திய மருத்துவக் கவுன்சில் (எம்சிஐ), மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பிங்கி ஆனந்த் ஆஜராகி வாதாடினார்.
பிங்கி ஆனந்த் கூறும்போது, “உத்தரபிரதேசத்திலுள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 2018-19-ம் கல்வியாண்டில் 41.95 சதவீத முதுநிலை பட்டப்படிப்பு இடங்கள் காலியாகவுள்ளதாக இந்திய மருத்துவக் கவுன்சில் (எம்சிஐ) தெரிவித்துள்ளது. இந்த இடங்களில் சேர்வதற்கான கட்-ஆப் தேதி மே 18 ஆகும்.
இந்த தேதி ஏற்கெனவே முடிந்துவிட்டது. எனவே காலியாகவுள்ள இடங்களில் மாணவர் சேர்க்கையை நடத்த உத்தரபிரதேச மாநில மருத்துவக் கல்வித்துறை இயக்குநர் பொறுப்பேற்கவேண்டும். சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் மே 31 வரை மாணவர் சேர்க்கையை நடத்த உத்தரவிடவேண்டும். மேலும் நீட் தேர்வு அடிப்படையிலேயே காலி இடங்கள் நிரப்பப்பட வேண்டும்” என்றார். பிங்கி ஆனந்தின் வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், காலியாகவுள்ள தனியார் மருத்துவக் கல்லூரி இடங்களை நீட் தேர்வு முடிவு அடிப்படையில் நிரப்பவேண்டும் என்று உத்தரவிட்டனர்.
அப்போது கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பிங்கி ஆனந்த் கூறுகையில், “இதே நடைமுறையை மற்ற மாநிலங்களும் கடைப்பிடிக்கலாம். தேவைப்பட்டால் கட்-ஆப் தேதியை மே 31 வரை அந்த மாநிலங்களை நீட்டித்துக்கொள்ள நீதிமன்றம் உத்தரவிடவேண்டும்” என்றார். இதையடுத்து மத்திய அரசின் கோரிக்கையையும் நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர். - பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT