புவி கண்காணிப்புக்கான இஒஎஸ்-08 செயற்கைக்கோளுடன் ஆக.15-ல் ஏவப்படுகிறது எஸ்எஸ்எல்வி டி-3

புவி கண்காணிப்புக்கான இஒஎஸ்-08 செயற்கைக்கோளுடன் ஆக.15-ல் ஏவப்படுகிறது எஸ்எஸ்எல்வி டி-3
Updated on
1 min read

சென்னை: இஸ்ரோ வடிவமைத்துள்ள புவி கண்காணிப்புக்கான அதிநவீன இஓஎஸ்-08 செயற்கைக்கோள், எஸ்எஸ்எல்வி டி-3 ராக்கெட் மூலம் ஆகஸ்ட் 15-ம் தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சார்பில் கார்டோசாட், ஸ்காட்சாட், ரிசாட், உள்ளிட்ட பல்வேறு செயற்கைக்கோள்கள் தொலையுணர்வு பயன்பாட்டுக்காக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டு வருகின்றன. அந்தவரிசையில் புவி கண்காணிப்பு செயல்பாடுகளுக்காக அதிநவீன இஒஎஸ்-08 எனும் செயற்கைக் கோளை இஸ்ரோ தற்போது வடிவமைத்துள்ளது. இந்த செயற்கைக்கோள் சிறியரக எஸ்எஸ்எல்வி டி-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து ஆகஸ்ட் 15-ம் தேதி காலை 9.17 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது.

இதற்கான முன்னேற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இஒஎஸ்-08 செயற்கைக்கோள் மொத்தம் 176 கிலோ எடை கொண்டது. இதன் ஆயுட்காலம் ஓராண்டாகும். இது தரையில் இருந்து சுமார் 475 கி.மீட்டர் தொலைவில் உள்ள புவிவட்டப் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது. இதில், எலெக்ட்ரோ ஆப்டிகல் இன்ஃப்ராரெட் பேலோடு (EOIR), குளோபல் நேவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டம்-ரிப்ளெக்டோமெட்ரி பேலோடு (GNSS-R) மற்றும் சிக் யுவி டோசிமீட்டர்(SiC UV Dosimeter) ஆகிய 3 ஆய்வு சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இஒஐஆர் கருவி பேரிடர் மேலாண்மை, சுற்றுச்சூழல் கண்காணிப்பு மற்றும் இரவில் துல்லியமான படம் எடுக்க உதவிசெய்யும்.

இதேபோல், ஜிஎன்எஸ்எஸ்-ஆர் கருவி கடல் மேற்பரப்பு காற்றின் செயல்பாடு, மண்ணின் ஈரப்பதம் மதிப்பீடு, நீர்நிலைகளை கண்டறிதல் போன்ற பணிகளுக்கு பயன்படும். சிக் யுவி டோசிமீட்டர் விண்ணில் யூவி கதிர்வீச்சு அளவை கண்காணித்து எச்சரிக்கை அளிக்கும். இது மனிதர்களை விண்ணுக்கும் அனுப்பும் ககன்யான் திட்ட விண்கலத்திலும் இடம் பெற உள்ளது. மேலும், எதிர்கால தொழில்நுட்ப தேவைக்கான ஆய்வுகளை இந்த கருவிகள் மேற்கொள்ளும். நம்நாட்டின் சுதந்திர தினத்தன்று (ஆகஸ்ட் 15) செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in