Published : 30 May 2018 11:38 AM
Last Updated : 30 May 2018 11:38 AM

உ.பி.யில் சிறுமி பாலியல் பலாத்காரம்: மேலும் ஒரு பாஜக எம்எல்ஏ மீது குற்றச்சாட்டு

உத்தரபிரதேசத்தில் மேலும் ஒரு பாஜக எம்எல்ஏ மீதும் பாலியல் புகார் எழுந்துள்ளது. திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை அவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர், தன்னை பங்கர்மாவ் தொகுதி பாஜக எம்எல்ஏவான குல்தீப் சிங் செங்கார், பலாத்காரம் செய்ததாகவும் மிரட்டுவதாகவும் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து தகவலறிந்த எம்எல்ஏ குல்தீப் சிங்கின் ஆதரவாளர்கள், புகாரை திரும்பப் பெறக் கோரி, சிறுமியின் தந்தை பப்பு சிங்கை கடுமையாக தாக்கினர்.

ஆனால், அங்கு வந்த போலீஸார், தாக்குதலில் படுகாயமடைந்த பப்பு சிங்கை கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து, சில நாட்களிலேயே சிறைக்குள் பப்பு சிங் மர்மமான முறையில் உயிரிழந்தார்.

இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, எம்எல்ஏ குல்தீப் சிங், அவரது உதவியாளர் சாஷி சிங் உள்ளிட்டோரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். எம்எல்ஏ குல்தீப் சிங் மீதான குற்றச்சாட்டுகளை சிபிஐ உறுதி செய்துள்ளது.

இந்நிலையில், உத்தரபிரதேசத்தில் மேலும் ஒரு பாஜக எம்எல்ஏ மீது பாலியல் பலாத்கார புகார் எழுந்துள்ளது. பிஸ்ஸாலி தொகுதி எம்எல்ஏ குஷாகரா சாகர் மீது பெண் ஒருவர் பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார். வீட்டில் வேலை செய்து வந்த ஒருவரின் மகளை திருமணம் செய்து கொள்வதாக கூறி குஷாகரா பாலியல் பலத்காரம் செய்து உள்ளார்.

பாலியல் பலாத்காரம் நடந்தபோது அவர் மைனராக இருந்துள்ளார். பின்னர் சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த பாலியல் பலாத்காரம் நடந்துள்ளது. பிஸ்ஸாலி தொகுதி எம்எல்ஏவாக இருக்கும் குஷாகரா சாகருக்கு வரும் ஜூன் மாதம் திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில் பாதிக்கப்பட்ட பெண், போலீஸில் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து அந்த பெண் கூறுகையில் ‘‘எம்எல்ஏ சாகர், என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். அவரது உறவினர்கள், திருமணம் செய்து வைப்பதாக முதலில் கூறினார்கள். ஆனால் 20 லட்சம் ரூபாய் பணம் தருகிறோம்.

வேறு ஒருவரை திருமணம் செய்து கொள் எனக்கூறி என்னை மிரட்டுகிறார்கள். இதனால் எனக்கு அச்சுறுத்தல் வருகிறது. நியாயம் கிடைக்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன்’’ எனக் கூறியுள்ளார். இந்த புகார் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x