நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு

நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை நடத்த உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

நித்யானந்தா மீது கடந்த 2010-ம் ஆண்டு தொடரப்பட்ட பாலியல் புகார் தொடர்பான வழக்கில், அவருக்கு ஆகஸ்ட் 6-ம் தேதி (இன்று) ஆண்மை பரிசோதனை நடத்த கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. நித்யானந்தா மற்றும் அவரது ஆதரவாளர்கள் நான்கு பேர் நீதிமன்றத்தில் ஆஜராகவும் உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் மருத்துவ பரிசோதனைக்கு தடை கோரி நித்யானந்தா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அவரது சார்பில் மூத்த வழக்கறிஞர் மோகன் பராசரன் ஆஜராகி, ‘கர்நாடக உயர் நீதிமன்றம் எங்கள் தரப்பு வாதத்தை கேட்கவில்லை. எனவே ஆண்மை பரிசோதனைக்கு தடை விதிக்க வேண்டும்’ என்று வாதிட்டார்.

அவரது வாதத்தை ஏற்ற நீதிபதிகள் ரஞ்சனா பிரகாஷ் தேசாய், என்.வி.ரமணா அடங்கிய அமர்வு, நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை நடத்த இடைக்கால தடை விதித்தது.

ஆனால் நித்யானந்தா ஆகஸ்ட் 18-ம் தேதி நேரில் ஆஜராக பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் தலையிட நீதிபதிகள் மறுத்து விட்டனர்.

நித்யானந்தா சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு குறித்து கர்நாடக அரசும், பாதிக்கப்பட்ட பெண் தரப்பிலும் ஒருவாரத்துக்குள் பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கின் அடுத்த விசாரணை வரும் 12-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in