Published : 22 May 2018 08:33 AM
Last Updated : 22 May 2018 08:33 AM

நீதிபதி லோயா மரணம் குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு: மும்பை வழக்கறிஞர்கள் சங்கம் தாக்கல்

நீதிபதி லோயா மரணம் தொடர்பான வழக்கில் விசாரணைக்கு உத்தரவிடக் கோரி மும்பை வழக்கறிஞர்கள் சங்கம் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.

குஜராத்தில் 2005-ம் ஆண்டு சொராபுதீன் ஷேக் உட்பட 3 பேர் போலி என்கவுன்ட்டர் மூலம் கொல்லப்பட்டதாக போலீஸ் அதிகாரிகள் மற்றும் அப்போது குஜராத் மாநில அமைச்சராக இருந்த பாஜக தலைவர் அமித் ஷா மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை மும்பை சிபிஐ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்து வந்த நீதிபதி லோயா கடந்த 2014-ம் ஆண்டு நாக்பூரில் திருமண விழாவுக்கு சென்றிருந்தபோது மாரடைப்பால் இறந்தார். லோயாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, நீதிபதி லோயாவின் மரணத்தில் மர்மம் இல்லை என்றும் இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடத் தேவையில்லை என்றும் கூறி கடந்த மாதம் மனுவைத் தள்ளு படி செய்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து மும்பை வழக்கறிஞர்கள் சங்கம், உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில் ‘‘நீதிபதி லோயா மரணம் குறித்து விசாரணை நடத்தாவிட்டால் நீதி தவற வாய்ப்பு உள்ளது. நீதியின் நலம் கருதி உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே அளித்த தீர்ப்பை மறுசீராய்வு செய்ய வேண்டும். நீதித்துறை மீதான நம்பகத்தன்மை நிலைநாட்டப்பட வேண்டும். நீதிபதி லோயா மரணம் குறித்து சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x