

புதுடெல்லி: மக்களவையில் நேற்று நடைபெற்ற விவாதத்தின் போது சரண் மக்களவைத் தொகுதி எம்.பி.யான ராஜீவ் பிரதாப் ரூடி பேசியதாவது: இந்தியாவில் அதிக அளவில் பாம்புகள் வசிக்கின்றன. ஆண்டுதோறும் இந்தியாவில் 30 லட்சம் முதல் 40 லட்சம் வரையிலான மக்கள் பாம்புக்கடியால் அவதிப்படுகின்றனர்.
ஓராண்டில் பாம்புக்கடியால் உயிரிழக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை 50 ஆயிரமாக உள்ளது. உலக அளவில் பாம்புக்கடியால் உயிரிழப்போரின் எண்ணிக்கை இந்தியாவில்தான் மிக அதிகம்.
வறுமையாலும், தேசியப் பேரழிவுகளாலும்அதிகம் பாதிக்கப்படும் மாநிலங்களில் பிஹார் முதலிடத்தில் உள்ளது. பிஹாரிலும் பாம்புக்கடியால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகம்.
பாம்புக்கடியால் உயிரிழப்போரின் எண்ணிக்கையை நாம் குறைக்க முடியும். பருவநிலை மாற்றத்தால் பாம்புக்கடி சம்பவங்கள் அதிகரித்துள்ளன. நாட்டில் 28 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்கு மேல் வெயிலின் அளவு கூடும்போது பாம்புக் கடி சம்பவங்களும் அதிகரிக்கின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.