Last Updated : 07 May, 2018 10:58 AM

 

Published : 07 May 2018 10:58 AM
Last Updated : 07 May 2018 10:58 AM

நீட் தேர்வு கடும் கட்டுப்பாடு: வெளிமாநில மாணவர்களுக்கு பாதிப்பு அதிகம் இல்லை

 நீட் தேர்வு நேற்று நடைபெற்றபோது, கடும் கட்டுப்பாடுகளால் வட மாநிலங்களில்  எழுதிய மாணவர்கள் பாதிப்பு அதிகம் இல்லை எனத் தெரியவந்துள்ளது.

தீவிரமாக சோதனையிட வேண்டி அனைவரையும் தேர்வு தொடங்குவதற்கு முன்பு சுமார் இரண்டரை மணி நேரம் முன்னதாக வரவேண்டி உத்தரவிடப்பட்டிருந்தது. இதன் காரணமாக மாணவர்களுக்கு  இடையூறு ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.

நாட்டில் நடைபெறும் நுழைவுத்தேர்வுகளில் நீட் அதிக முக்கியத்துவம் பெற்று விட்டது. குடிமைப்பணிக்கான யுபிஎஸ்சி தேர்வை விட நீட் எழுதும் மாணவர்களுக்கு மிகக் கடுமையான சோதனைகள் நடத்துவது வழக்கமாகி விட்டது. இதற்கு காரணம் கடந்த 2015-ல் ஹரியானா, டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்களில் நடந்த மருத்துவ நுழைவுத்தேர்வில் பலர் மொபைல் மற்றும் புளுடூத் மூலம் காப்பி அடித்தது கண்டுபிடிக்கப்பட்டது என்று கூறலாம்.

அப்போது, இந்த தேர்வு ஏஐபிஎம்டி(AIPMT-All India Pre Medical Test) எனும் பெயரில் சிபிஎஸ்இ நடத்தி இருந்தது. இதனால் நாடு முழுவதிலும் அந்த வருடம் மறுதேர்வு நடத்தப்பட்டது. இதன் மீதான உச்ச நீதிமன்ற வழக்கிற்கு பின் நடத்தப்பட்ட தேர்வில் மாணவ, மாணவிகளுக்கு தேர்வு எழுதும் போது புதிய கடுமையான விதிமுறைகள் அமலாக்கப்பட்டன.

இதன் மறுவருடம் தலையில் ‘நகாப்’ எனும் துணியை போர்த்தி தேர்வு எழுதிய முஸ்லீம் மாணவி அனுமதிக்கப்படவில்லை. பிறகு அவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த மனுச்செய்த பின் அனுமதிக்கப்பட்டார். இந்தவிதிமுறைகள் அனைத்தும் நீட் தேர்வு அறிமுகத்திற்கு பின் நாடு முழுவதிலும் தொடர்கிறது.

இந்தவகையில், வட மாநிலங்களில் நேற்று தேர்வு எழுதிய மாணவர்களுக்கும் ஜீன்ஸ் உள்ளிட்ட முழுப்பேண்ட் மற்றும் முழுச்சட்டை அணியக்கூடாது எனவும், அரைக்கால் மற்றும் அரைக்கை சட்டை அல்லது டிஷர்ட் மட்டுமே அணிய மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் சிலர் அணிந்த பெல்ட்களும் சோதனையின் போது கழட்டி வைக்கப்பட்டன.

இதேபோல், மாணவிகளுக்கும் அணிகலன்கள், மணமானவர்களின் தாலி போன்றவை அணியத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இவர்கள் நுழையும் முன் கடுமையான சோதனைகள் நடத்தி அவை தேர்வு அறையில் நுழையும் முன்பாக பிடுங்கி வைக்கப்பட்டன. இதுபோன்ற சோதனைகளால் மிகச்சில மாணவர்களே பாதிக்கப்பட்டதாகத் தெரிய வந்துள்ளது.

இது குறித்து ‘தி இந்து’விடம் டெல்லியின் ஆர்.கே.புரம் பள்ளியில் தேர்வு எழுதிய உபியின் ஆசம்கர் மாணவர் அஃபான் அப்துல்லா கூறும்போது, "தேர்வுக்காக விண்ணப்பிக்கும் போதே சிபிஎஸ்இ இணையதளத்தில் மாணவ, மாணவிகளுக்கான விதிமுறைகள் அனைத்தும் அளிக்கப்பட்டிருந்தன.

இதை சரியாகப் படிக்காதவர்களுக்கு தேர்வு மையத்தில் நுழையும் முன் சிக்கல் இருந்தது. முஸ்லீம் பெண்களுக்கு தலையில் கட்டும் நகாப் துணி மற்றும் பர்தாவிற்கும் அனுமதி இருந்தது. ஆனால், இவர்கள் குறிப்பிட்ட நேரம் முன்னதாக அழைக்கப்பட்டு சோதனையிடப்பட்ட பின் அனுமதிக்கப்பட்டனர்.’ எனத் தெரிவித்தார்.

இதேபோல், சீக்கிய மாணவர்கள் வழக்கமாக ’பகடி’ எனும் துணிப்பாகையை தலையில் அணியும் வழக்கம் கொண்டவர்கள். இவர்கள் அதை கழட்டாமல் தேர்வு எழுத வேண்டி டெல்லி உயர் நீதிமன்றத்தில் கடந்த மாதம் மனுச்செய்திருந்தனர். அதில் அவர்களுக்கு பகடி அணிந்துவரும் போது சோதனைக்காக தேர்விற்கு முன்னதாக வர வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்த உத்தரவை டெல்லியின் அருகிலுள்ள பஞ்சாப், சண்டிகர் மற்றும் ஹரியானா மாநில பஞ்சாபி மாணவர்களுக்கும் கடைப்பிடிக்கப்பட்டது.

இந்த தேர்வு குறித்து ‘தி இந்து’விடம் மபியின் போபால், ராஜஸ்தானின் உதய்பூர், காஷ்மீரின் ஸ்ரீநகர் மற்றும் டெல்லி உள்ளிட்ட இடங்களில் தேர்வு எழுதிய மாணவர்கள் பேசினர். அவர்கள் அனைவருமே சோதனைகளை விட தமது தேர்வின் வினாக்கள் கடுமையானதா? எளிதானதா? என்பதை பற்றியே கருத்து கூறினர்.

தேர்விற்கு முன்பாக நடத்தப்பட்ட சோதனை மீது அவர்கள் அதிக கவலை கொள்ளவில்லை. எனினும், காலை 10.00 மணிக்கு துவங்கிய தேர்விற்கு அதிகாலை 7.00 மணி முதல் 9.30 மணி வரை ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை முன்கூட்டியே அளித்ததன் மீது குறைபட்டுக் கொண்டனர்.

இது குறித்து தி இந்து’விடம் சிபிஎஸ்இயின் செய்தி தொடர்பாளர் வட்டாரம் கூறும்போது, ”இந்த வருடம் தமிழகத்தில் இருந்து 31 சதவிகிதம் மாணவர்கள் கூடுதலாக தேர்வு எழுதினர்.

இவர்களுக்கு கடந்த வருடம் 149 என்றிருந்த தேர்வு மையங்கள் 170 என உயர்த்தப்பட்டது. இதுபோதாமல், 3685 பேர் மட்டுமே கேரளாவின் எர்ணாகுளத்தில் மையம் ஒதுக்கப்பட்டிருந்தது. ராஜஸ்தான், சிக்கிம், கர்நாடகா உள்ளிட்ட வேறுபல மாநிலங்களை சேர்ந்த தமிழக மாணவர்கள் தாமாக விரும்பி அங்கு தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர்.

இதில், தமிழ்மொழியில் தேர்வு எழுத விரும்பியவர்கள் அனைவருக்கும் தமிழ் வினாத்தாள்கள் அளிக்கப்பட்டன. தமிழகத்தில் மட்டுமே அதிகம் இருந்ததாக எங்களுக்கு புகார்கள் வந்திருந்தன. இதற்கு அந்த குறிப்பிட்ட தேர்வு மையம் காரணமா என விசாரிக்க இருக்கிறோம்" எனத் தெரிவித்தனர்.

தமிழகத்தை போல் இங்கும் தேர்வு எழுதிய மாணவர்களில் பலருக்கு அண்டை மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டதாகப் புகார் இருந்தது.

ஆனால், இவை அதிகபட்சமாக சுமார் 300 கி.மீ தூரம் மட்டுமே இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் அவர்கள் அனைவருமே இந்தி பேசும் மாநிலங்கள் என்பதால் அந்த மாணவர்களுக்கு பெரிய பாதிப்பு ஏற்படவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x