Published : 17 May 2018 07:55 AM
Last Updated : 17 May 2018 07:55 AM
கர்நாடகாவில் ஆட்சி அமைக்க பாஜகவும் மதச்சார்பற்ற ஜனதா தளமும் (மஜத) போட்டிப் போடும் நிலையில் 2 சுயேச்சை எம்எல்ஏ.க்கள் காங்கிரஸுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதன் மூலம் காங்கிரஸ், மஜத கூட்டணி எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 118 ஆக உயர்ந்துள்ளது.
கர்நாடக தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை (112) கிடைக்காததால் காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்க மஜத முயற்சிக்கிறது. பாஜக 104 இடங்களை பிடித்து தனிப்பெரும் கட்சியாக இருப்பதால் அக்கட்சியும் ஆட்சியமைக்க முயன்று வருகிறது. ஆட்சி அமைக்க தேவையான 8 எம்எல்ஏ.க்களை காங்கிரஸ், மஜத, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளிடமிருந்தும் சுயேச்சை எம்எல்ஏ.க்களையும் இழுக்க முயன்று வருகிறது.
ராணி பென்னூரில் காங்கிரஸ் வேட்பாளரும், சபாநாயகருமான கோலிவாட்டை வீழ்த்திய சுயேச்சை வேட்பாளர் சங்கர் நேற்று காலை பாஜகவுக்கு ஆதரவு தருவதாக தெரிவித்தார். ஆனால், திடீரென மாலையில் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமாரை சந்தித்து காங்கிரஸுக்கு ஆதரவு தருவதாக தெரிவித்தார்.
இதேபோல முல்பாகல் தொகுதியில் வென்ற மற்றொரு சுயேச்சை வேட்பாளரான நாகேஷும் டி.கே.சிவகுமாரை சந்தித்து தனது ஆதரவு தெரிவித்துள்ளார்.
பாஜகவின் குதிரை பேரத்தை தடுக்கும் வகையில் காங்கிரஸை சேர்ந்த டி.கே.சிவகுமார், சுயேச்சைகளை காங்கிரஸின் பக்கம் இழுத்துள்ளார். இதேபோல பாஜக எம்எல்ஏ.க்கள் சிலரையும் காங்கிரஸ் கட்சிக்கு இழுக்கும் முயற்சியிலும் டி.கே.சிவகுமார், எம்.பி.பாட்டீல் ஆகியோர் ஈடுபட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாஜகவில் இருக்கும் 6 லிங்காயத்து எம்எல்ஏ.க்கள் காங்கிரஸுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக எம்.பி.பாட்டீல் பகிரங்கமாக அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT