Published : 13 May 2018 10:05 AM
Last Updated : 13 May 2018 10:05 AM

மோடியின் கோயில் வழிபாடு தேர்தல் விதிகளுக்கு எதிரானது: காங்கிரஸ் குற்றச்சாட்டு

கர்நாடகா தேர்தலையொட்டி, அம்மாநிலத்தில் உள்ள இந்து வாக்காளர்களைக் கவருவதற்காகவே நேபாளத்தில் பிரதமர் நரேந்திர மோடி கோயில்களில் வழிபாடு செய்ததாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

அரசுமுறைப் பயணமாக நேபாளத்துக்குச் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அங்கு அமைந்துள்ள பசுபதிநாதர் ஆலயம், முக்திநாத் ஆலயம் ஆகியவற்றில் நேற்று வழிபாடு செய்தார். இந்நிலையில், பிரதமரின் இந்தக் கோயில் வழிபாட்டினை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது. இதுகுறித்து, அக்கட்சியின் பொதுச் செயலாளர் அசோக் கெலாட் கூறியதாவது:

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் சமயத்தில், நேபாளத்தில் பிரதமர் நரேந்திர மோடி கோயில் வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார். இது, அம்மாநிலத்தில் உள்ள இந்து வாக்காளர்களைக் கவருவதற்கான செயலாகும். மேலும், அவர் கோயில்களில் வழிபட்ட காட்சிகள் தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பப்பட்டன. இதுவும் தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு முரணானது. பிரதமரின் இந்த செயல், ஜனநாயகத்துக்கு நல்லதல்ல என அசோக் கெலாட் தெரிவித்தார்.

இதுகுறித்து கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஷ்வர் கூறுகையில், “தேர்தல் நேரத்தில் லிங்காயத்து மக்களை திசை திருப்பவே மோடி இத்தகைய நாடகத்தை அரங்கேற்றியுள்ளார்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x