Last Updated : 02 May, 2018 03:49 PM

 

Published : 02 May 2018 03:49 PM
Last Updated : 02 May 2018 03:49 PM

மோடியை ‘கார்ப்பரேட் சேல்ஸ்மேன்’ என அழைப்பதா?- ஜிக்னேஷ் மேவானி, பிரகாஷ்ராஜ் மீது பாஜக புகார்

பிரதமர் நரேந்திர மோடியை 'கார்ப்பரேட் சேல்ஸ்மேன்' என அழைத்த குஜராத் எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி மற்றும் இதேபோல் கடுமையாக விமர்சித்ததாக நடிகர் பிரகாஷ்ராஜ் ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி தேர்தல் ஆணையத்திடம் பாஜக புகார் அளித்துள்ளது.

கர்நாடகாவில் வருகிற 12-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று, 15-ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. இதில் ஆளும் காங்கிரஸை வீழ்த்திவிட்டு ஆட்சியைக் கைப்பற்ற பாஜக பல்வேறு வியூகங்களை வகுத்து பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் குஜராத் எம்எல்ஏவும், தலித் செயற்பாட்டளருமான ஜிக்னேஷ் மேவானி, நடிகர் பிரகாஷ்ராஜ் ஆகியோர் பாஜகவுக்கு எதிராகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதால் அக்கட்சியினர் ஆத்திரம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில் கர்நாடக பாஜக சார்பாக பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா ஆகியோரை அவமதித்த ஜிக்னேஷ் மேவானி மற்றும் நடிகர் பிரகாஷ்ராஜ் ஆகியோர் மீது கர்நாட‌க தேர்தல் ஆணையத்தில் இன்று புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகார் மனுவில், ''கடந்த ஏப்ரல் 29-ம் தேதி பெங்களூருவில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்ற குஜராத் எம்எல்ஏவும், தலித் செயற்பாட்டளருமான ஜிக்னேஷ் மேவானி, பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்தார். 'மோடி ஒரு கார்ப்பரேட் சேல்ஸ்மேன். நாட்டை கொள்ளையடிக்கும் திருடன்' என அவதூறாகப் பேசியுள்ளார்.

இதே போல நடிகர் பிரகாஷ்ராஜ் பிரதமர் மோடி மீதும், முதல்வர் வேட்பாளர் மீதும் பல்வேறு பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறி வருகிறார். பாஜக நிர்வாகிகள் மீது தொடர்ந்து ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளைக் கூறிவருகிறார். இதனால் பாஜக தலைவர்களின் புகழுக்கும், நற்பெயருக்கும் களங்கம் ஏற்பட்டுள்ளது.எனவே கர்நாடகத் தேர்தல் முடியும் வரை ஜிக்னேஷ் மேவானி, பிரகாஷ்ராஜ் ஆகிய இருவருக்கும் கர்நாடகாவில் நடக்கும் எந்தக் கூட்டத்திலும் பங்கேற்க அனுமதி அளிக்கக் கூடாது'' எனக் கோரியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x