Last Updated : 24 May, 2018 08:27 AM

 

Published : 24 May 2018 08:27 AM
Last Updated : 24 May 2018 08:27 AM

மைசூரு சாமுண்டீஸ்வரி கோயிலில் பதவியேற்பதற்கு முன் குமாரசாமி வழிபாடு

கர்நாடக முதல்வராக பதவியேற்பதற்கு முன் மைசூருவில் உள்ள‌ சாமுண்டீஸ்வரி கோயிலில் குமாரசாமி நேற்று வழிபட்டார்.

கர்நாடகாவில் ஆட்சி அமைத்த பாஜக மாநில தலைவர் எடியூரப்பா கடந்த சனிக்கிழமை ராஜினாமா செய்தார். இதையடுத்து காங்கிரஸ் ஆதரவு பெற்ற மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் மாநில தலைவர் குமாரசாமியை ஆட்சி அமைக்குமாறு ஆளுநர் வஜுபாய் வாலா அழைப்பு விடுத்தார். இதைத் தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீரங்கம் கோயிலில் வழிபாடு செய்த குமாரசாமி ஹாசன், மங்களூரு என அடுத்தடுத்த தினங்களில் பல்வேறு கோயில்களுக்குச் சென்று வழிபட்டார்.

இந்நிலையில் நேற்று கர்நாடக முதல்வராக பொறுப்பேற்பதற்கு முன் குமாரசாமி தனது மனைவி அனிதா உடன் மைசூருவுக்கு ஹெலிகாப்டரில் சென்றார். அங்கிருந்து காரில் சாமுண்டீஸ்வரி கோயிலுக்குச் சென்ற குமாரசாமி, அங்கு அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டார். பிற்பகலில் பெங்களூரு திரும்புவதற்கு முன் தனது சொந்த தொகுதியான ராம்நகரில் மக்களைச் சந்தித்து வாழ்த்துகளைப் பெற்றார்.

அப்போது குமாரசாமி பேசும்போது, “கர்நாடகாவின் முதல்வராக 5 ஆண்டு பதவிக்காலத்தை நிறைவு செய்வேன். தெய்வத்தின் அருளும், மக்களின் ஆசியும் இருப்பதால் எனது ஆட்சிக்கு எந்த சிக்கலும் வராது. இந்த 5 ஆண்டுகளில் மக்களுக்கு தேவையான அனைத்தையும் செய்வேன்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x