Published : 11 May 2018 03:32 PM
Last Updated : 11 May 2018 03:32 PM
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பாஜக தலைவர் அமித்ஷா மற்றும் பாஜகவினர் சென்ற வாகனம் மீது தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்கள் தாக்குதலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரம் வியாழக்கிழமை மாலையுடன் நிறைவடைந்தது. பிரச்சாரத்தை முடித்துவிட்டு இன்று (வெள்ளிக்கிழமை) பாஜக தலைவர் அமித் ஷா திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.
அதன்பின்பு, கோயிலில் இருந்து கார் மூலம் ரேனிகுண்டா விமான நிலையத்திற்கு சென்றார். அப்போது திருப்பதி மலை அடிவாரத்தில் கருப்பு கொடியுடன் காத்திருந்த தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்கள் அமித் ஷாவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கம் எழுப்பினர்.
மேலும், அமித் ஷாவின் காரை மறிக்க முயன்றனர். அப்போது அமித் ஷா மற்றும் பாஜக தொண்டர்கள் சென்ற கார் ஒன்றின் கண்ணாடியை தெலுங்கு தேசம் கட்சியினர் உடைத்தனர்.
இதனால் பாஜக, தெலுங்கு தேசம் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதன்பின் கார் கண்ணாடியை உடைத்த தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்களை போலீஸார் கைது செய்தனர். இதனால் ஆவேசம் அடைந்த தெலுங்கு தேசம் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் குண்டுகட்டாக தூக்கி அப்புறப்படுத்தினர்.
ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் விவகாரத்தில் மத்திய அரசு துரோகம் இழைத்து விட்டதாக ஆளும் தெலுங்கு தேசம் குற்றம்சாட்டி வருகிறது . இதனால், மத்தியில் பாஜகவுடனான கூட்டணியை தெலுங்கு தேசம் விலக்கிக் கொண்ட நிலையில், அமித் ஷா கான்வாய் மீது அக்கட்சியினர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT