Published : 29 May 2018 06:08 AM
Last Updated : 29 May 2018 06:08 AM

ஆர்டிஐ சட்ட வரம்புக்கு அப்பாற்பட்டவை அரசியல் கட்சிகள்: மேல் முறையீட்டு மனு மீது மத்திய தேர்தல் ஆணையம் கருத்து

அரசியல் கட்சிகள் தகவல் அறியும் உரிமை சட்ட வரம்புக்கு (ஆர்டிஐ) அப்பாற்பட்டவை என மத்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது மத்திய தகவல் ஆணையத்தின் (சிஐசி) உத்தரவுக்கு முரணாக உள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் புனே நகரைச் சேர்ந்த விஹர் துர்வே, ஆர்டிஐ சட்டத்தின் கீழ் தேர்தல் ஆணையத்துக்கு ஒரு மனு அனுப்பி இருந்தார். அதில், “பாஜக, காங்கிரஸ், பகுஜன் சமாஜ், தேசியவாத காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், சமாஜ்வாதி ஆகிய 6 தேசிய கட்சிகள் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள தேர்தல் பத்திரங்கள் மூலம் எவ்வளவு நன்கொடை பெற்றுள்ளன” என கோரி இருந்தார்.

இதற்கு மத்திய பொது தகவல் அதிகாரி (சிபிஐஓ) அளித்த பதிலில், “நீங்கள் கேட்ட தகவல் ஆணையத்தில் இல்லை. அரசியல் கட்சிகள் தொடர்புடைய விவரங்களை கேட்டுள்ளீர்கள். ஆனால் அரசியல் கட்சிகள் ஆர்டிஐ சட்ட வரம்புக்கு அப்பாற்பட்டவை. 2017-18 நிதி ஆண்டில் தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்ற நன்கொடை பற்றிய விவரங்கள் அடங்கிய அறிக்கையை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்க செப்டம்பர் 30 கடைசி நாள் ஆகும். எனவே, அக்கட்சிகள் அறிக்கையை சமர்ப்பித்திருக்கலாம். அல்லது இனிமேல் சமர்ப்பிக்கலாம்” என கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து, துர்வே மேல் முறையீடு செய்தார். இந்த மனு மீது தேர்தல் ஆணையத்தின் முதல் மேல் முறையீட்டு அதிகாரியும் மூத்த முதன்மை செயலாளருமான கே.எப்.வில்ப்ரெட் அளித்த பதிலில், “இந்த விவகாரத்தில் சிபிஐஓ எடுத்த முடிவு சரியானதுதான்” என குறிப்பிட்டுள்ளார். அதாவது அரசியல் கட்சிகள் ஆர்டிஐ சட்ட வரம்புக்கு அப்பாற்பட்டவை என்று உறுதிப்படுத்தி உள்ளார்.

அங்கீகரிக்கப்பட்ட 6 தேசிய கட்சிகள் ஆர்டிஐ வரம்புக்கு உட்பட்டவைதான் என்று கடந்த 2013-ம் ஆண்டு ஜூன் 3-ம் தேதி சிஐசி உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து மேல் நீதிமன்றங்களில் மேல் முறையீடு செய்யப்படவில்லை. ஆனால், ஆர்டிஐ சட்டத்தின் கீழ் வரும் மனுக்களுக்கு பதில் அளிக்க அரசியல் கட்சிகள் மறுத்து வருகின்றன. இதுகுறித்து ஆர்டிஐ ஆர்வலர்கள் உச்ச நீதிமன்றத்தை அணுகி உள்ளனர். இந்த மனுக்கள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து முன்னாள் தலைமை தகவல் ஆணையர் ஏ.என்.திவாரி கூறும்போது, “6 தேசிய கட்சிகள் பொது அமைப்புதான் என்றும் ஆர்டிஐ சட்ட வரம்புக்கு உட்பட்டவை என்றும் சிஐசி உத்தரவிட்டுள்ளது. இதற்கு உயர் நீதிமன்றமோ உச்ச நீதிமன்றமோ தடை விதிக்காத நிலையில், இதற்கு முரணாக தேர்தல் ஆணையம் முடிவு எடுக்க முடியாது” என்றார். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x