இந்திய குடியுரிமையை துறந்து வெளிநாட்டில் குடியேறும் குஜராத்திகள் எண்ணிக்கை அதிகரிப்பு

இந்திய குடியுரிமையை துறந்து வெளிநாட்டில் குடியேறும் குஜராத்திகள் எண்ணிக்கை அதிகரிப்பு
Updated on
1 min read

புதுடெல்லி: குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், இந்திய குடியுரிமையை வேண்டாம் என்று சொல்லிவிட்டு வெளிநாடுகளில் குடியேறுவது ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.

2023-ம் ஆண்டில் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 241 பேர் தங்களுக்கு இந்திய குடியுரிமை வேண்டாம் என்று கூறி தங்கள் பாஸ்போர்ட்டை இந்திய அரசிடம் திருப்பி ஒப்படைத்துள்ளனர். 2022-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை 2 மடங்கு அதிகம் ஆகும். 2022-ல் 241 பேர் தங்கள் இந்திய குடியுரிமையை கைவிட்டனர். நடப்பு ஆண்டு மே மாதம் வரையில் மட்டும் அம்மாநிலத்தைச் சேர்ந்த 244 பேர் தங்கள் இந்திய குடியுரிமையை கைவிட்டுள்ளனர்.

2014 – 2022 வரையிலான காலகட்டத்தில் குஜராத்திலிருந்து மட்டும் 22,300 பேர் தங்கள் இந்திய குடியுரிமையை கைவிட்டுள்ளனர்.

இந்தப் பட்டியலில் டெல்லி (60,414) முதல் இடத்திலும், பஞ்சாப் (28,117) இரண்டாம் இடத்திலும் உள்ளது. இந்திய குடியுரிமையை வேண்டாம் என்று கூறுபவர்களில் பெரும்பாலானோர் 30 வயது முதல் 45 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர். இவர்கள் அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் குடியுரிமை பெறுகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in